உலத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனது தொடர்பினை ஏனையவர்களுடன் பேணுவது இயற்கையானதும் அவசியமானதுமாகும்.
ஒரு சில மனிதர்கள் தான் தமது தொடர்பினை ஏனைய மனிதர்களிடம் பேண விரும்புவதில்லை. அநேகமாக உளரீதியாக பாதிக்கப்படுகின்றவர்கள் ஆய்வுகளின் முடிவின்படி இவர்கள் தனிநபர் தொடர்பினை பேணாதவர்கள் என்பது வெளிப்படையானதாக இருக்கின்றது.
சில திருமண முறிவுகளை ஆய்வு செய்கின்ற போது குறித்த மணமகன் சிறந்த தனிநபர் தொடர்பினை சிறுபராயத்திலிருந்தே கொண்டிருக்காமையினால் திருமணம் முடித்த பின்பு தனது மனைவியின் குடும்ப உறவினர்களுடன் சிறந்த உறவினைப் பேணத் தெரியாது பல முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் திருமண முறிவு ஏற்பட்ட சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
எனவே, திருமணத்தின் போது மணமகனை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்ற போது குறித்த மணமகன் ஏனையவர்களுடன் சிறந்த தொடர்பினை பேணுகின்றாரா? நல்ல நண்பர்களைக் கொண்டுள்ளாரா? என ஆராய்ந்து பார்ப்பது மிக மிக அவசியமாகும்.
முகங்கள் சிரிக்கின்றன என்பதற்காக உள்ளங்கள் சிரிக்கின்றன என நாம் முன்கூட்டியே தீர்மானம் எடுத்து விடுவது அபாயகரமானது. குறித்த நபரின் தனிநபர் தொடர்பு, சமூகத்திற்கு அவர் வாய்ப்பேச்சின்றி செயலால் செய்கின்ற சேவை என்பதை ஆய்ந்த பின்பே அவர் நல்லவரா? இல்லையா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா


0 Comments