மத வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிட முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தாம் விரும்பிய மதத்தை வழிபடவும், மதக் கலாச்சார விழுமியங்கள் மற்றும்
மரபுகளை பின்பற்றவும் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சகல
உரிமைகளும் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் உச்ச நீதிமன்றினால் கூட மத வழிபாட்டு
விவகாரங்களில் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் மிருக பலி பூஜைகளை தடை
செய்யுமாறு கோரி சில அமைப்புக்கள் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலான
விசாரணைகளின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜாதிக சங்க சம்மேளனம் மற்றும் மிருக வதைகளை ஒழிக்கும் அமைப்பும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை, மிருக பலி பூஜைகளின் போது சில விடயங்களைக் கருத்திற்
கொள்ளுமாறு பிரதம நீதியரசர் ஆலய பரிபாலன சபையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மிரு பலி பூஜைக்கான மிருகங்களின் எண்ணிக்கையை வரையறுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாக மிருகங்களின் எண்ணிக்கையை 300 முதல் 400 ஆக வரையறுக்குமாறு கோரியுள்ளார்.
பொதுமக்கள் பார்வையிடும் திறந்த வெளியில் ஒரே தடவையில் அதிகளவான
மிருகங்களை பலியிடாது, ஒன்றன் பின் ஒன்றாக மிருகங்களை பலியிடுமாறு
அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பிலான இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதே பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் மிருக பலி பூஜைகள் நடைபெற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி ஆலயத்தில் மிருக பலி பூஜைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

0 Comments