தேர்தலை நடத்தாது மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பது மக்களின் சுயாதீபத்தியம் மற்றும் வாக்குரிமையை மீறும் செயல் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இலங்கை அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் ஒக்டோபர் மாதம் ஆரம்பத்தில் முடிவடைய உள்ளதுடன் இந்த மாகாண சபைகள் கலைக்கப்படும்.
உத்தேச 20 வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த வருடம் பதவிக்காலம் முடிவடையும் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கப்படும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் பின்னணியில் அரசாங்கம் தற்போது மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் சூழ்ச்சியாக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோத செயல்களில் புதிய செயல் மாகண சபைத் தேர்தலை ஒத்திவைக்க கொண்டு வரப்படும் 20வது திருத்தச் சட்டமாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதியில் இருந்து ஜனநாயகம் தலைகீழாக மாற ஆரம்பித்தது.
144 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமரை பதவியில் இருந்து நீக்கி விட்டு 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகளின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் பதவிக்கு வந்ததும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைமைத்துவத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துண்டின் மூலம் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் என கூறியிருந்தனர்.
இதற்காக கொண்டு வந்த 19வது திருத்தச் சட்டம் ஒரு ஏமாற்று நடவடிக்கை. நிறைவேற்று அதிகாரம் முன்பு இருந்ததை விட மிகவும் பலமிக்கதாக மாறியுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments