ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வெற்றி என்ற புள்ளியை அடைவதற்கே முனைந்து கொண்டு இருக்கிறான். ஆனால் அது ஒரு எட்டாக் கனி போல பலருக்கும் அவ்வளவு இலகுவில் கிடைத்துவிடாமல் நழுவிக் கொண்டே இருக்கும். இன்னும் சிலருக்கோ தொட்டதெல்லாம் பொன்னாகும்.
“நாம் மா விற்கப் போனால் காற்றும், உப்பு விற்கப் போனால் மழையும் கொட்டுகையில் இவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் துலங்குகிறது?” என வென்றவர்களைப் பார்த்து மற்றையவர்கள் பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் சில விடயங்களை நாம் பின்பற்றி வந்தால் எங்கள் பின்னேயும் ஒரு பழக்கப்பட்ட நாய்க்குட்டி போல வெற்றி ஓடிவரும்.
அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளல்
நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. ஏனெனில் மீண்டும் நெருப்பு சுட்டு விடும் என்று அது அனுபவ பூர்வமாக பாடம் படித்து விட்டது. அதுபோல சிலர் தங்களுடைய இலக்கை அடைய தொடர்ந்தும் ஒரேவிதமான வகையில் தான் முனைவார்கள். அது முன்னர் தோல்வியை தந்திருந்தபோதும் அதைப் பற்றி ஆராய மாட்டார்கள் . எனவே அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்விகளை அசைபோட்டு அனுபவப்பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடை போடுங்கள்.
கைவிடுங்கள் பயத்தை
பயத்தை கைவிடுவதே வெற்றிப்பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக் கூடாது.தடங்கல்களைக்கண்டு தயங்கிநிற்ககூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பயம் இருந்தால் துணிச்சலாக ஒரு காரியத்தில் நம்மை நம்பி இறங்க மாட்டோம். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை வேண்டிநிற்போம்,. இப்படி பிறரின் கால்களில் நிற்பதால் இருபோதும் வெற்றி தேடிவரப்போவதில்லை. அப்படி வந்தாலும் கூட அந்த வெற்றிக்கு நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது. எனவே எதுவென்றாலும் எதிர்கொள்ளும் மனதோடு துணிந்து கருமமாற்றுங்கள்.
வாயுள்ள பிள்ளையாக மாறுங்கள்
வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். உங்கள் வார்த்தைகளில் தன்னம்பிக்கையும் எதிர்காலம் பற்றிய கனவுகளும் எதிரில் இருப்பவர்களை வசப்படுத்தும்.எனவே உங்களின் திட்டங்களுக்கு அவர்கள் மனமுவந்துஒத்துழைப்பார்கள். அந்த ஒத்துழைப்பு எதிர்ப்படும் தடைகளைத்தாண்டி வெற்றியை நோக்கிப் பாய பேருதவி செய்யும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்.
கைவிடக் கூடாத கருமங்கள்
சாதனைக்கு எல்லைகிடையாது.சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. ‘கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும். சிலர் ஒரு கட்டம் வரை தமது உயிரைக் கொடுத்து முயற்சி செய்வார்கள். ஆனால் பின்னர் அது சரிவராது என்று கைவிட்டு விடுவார்கள். ஆனால் அவர்கள் இன்னும் சிறிது அந்த முயற்சியை தொடர்ந்திருந்தால் மகோன்னத வெற்றியை அடைந்திருப்பார்கள். அவர்கள் இடைநடுவில் கைவிட்டதால் அவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை அவரே இழக்கச் செய்திருப்பார். எனவே எது வந்தபோதும் எண்ணித் துணிந்த கருமத்தை கடைசிவரை கைவிடக் கூடாது.


0 Comments