-முஹம்மது முஸப்பிர்
இயந்திரம் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலில், காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில், காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், இன்று அதிகாலை 1.15 க்கு கற்பிட்டி பாலாவி வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருமண நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு காரில் இவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது பாலாவி புகையிரத நிலையத்தில் இயந்திரம் மாறுவதற்காக பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாக்கல் ஏற்றும் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்த போது வேகமாக வந்த கார் புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
கார் விபத்திற்குள்ளாகி தீப்பற்றிக் கொண்டதோடு உடனடியாக அவ்விடத்திற்கு வந்த அப்பிரதேச இளைஞர்கள் காரின் தீயை அணைந்து, காரினு சிக்கிக் கொண்டிருந்த பலத்த காயங்களுக்குள்ளான இருவரையும் மீட்டு புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் காரைச் செலுத்தி வந்த நபர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments