Subscribe Us

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்தில் இருந்து வந்த கல்லா


ஹஜ்ருல் அஸ்வத் கல் தொடர்பாக பலவீனமான ஹதீஸ்கள் நிறைய இருந்தாலும் ஆதாரப்பூர்வமான செய்திகளும் இடம்பெற்றுள்ளது.

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். இது பாலை விட வெண்மையானதாகும். ஆதமுடைய பாவங்கள் அதை கருப்பாக்கி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : திர்மிதீ (803)

இந்த செய்தியில் இடம்பெறும் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நல்லவர் என்றாலும் கடைசி காலத்தில் அவர் மூளை குழம்பிவிட்டது. எனவே அவர் மூளைகுழம்பிய காலத்திற்கு முன்பாக கேட்டவரின் செய்தி ஏற்றுக் கொள்ளப்படும். அதே நேரத்தில் மூளைகுழம்பிய பின்னர் கேட்ட செய்தியாக இருந்தால் அந்த செய்தி ஏற்றுக் கொள்ளக்கூடாது. இது ஹதீஸ்கலையின் விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில் அதா பின் ஸாயிப் என்பவரிடமிருந்து ஜரீர் என்பவர் அறிவிக்கிறார். இவர் அதா விடம் முளைகுழம்பிய பின்னர் கேட்டதாகும்.
(நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. 

ஹஜ்ருல் அஸ்வதும் மகாமு இப்ராஹீமும் சொர்க்கத்தின் மாணிக்கக் கற்களில் உள்ளவையாகும். அவற்றின் ஒளியை அல்லாஹ் மங்கச் செய்துவிட்டான். அவற்றின் ஒளியை அவன் மங்கச் செய்யாமலிருந்தால் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட பகுதியை அவை ஒளிரச் செய்திருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : திர்மிதீ (804)

இச்செய்தியில் இடம்பெறும் ரஜா அபூயஹ்யா என்பவர் பலவீனமானவராவார்.
(நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 208)

இந்தசெய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் பின்வரும் செய்திகள் ஆதாரப்பூர்வனமானதாகும்.
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலிருந்து இறங்கியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி),
நூல்: நஸாயீ (2886)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் அதா பின் ஸாயிப் என்பவரே இடம்பெற்றுள்ளார். என்றாலும் இவரிடம் இந்த செய்தியை கேட்டவர் ஹம்மாத் பின் ஸலமா என்பவராவார். இவர் அதா முளைகுழம்பியதற்கு முன்னர் கேட்டதாகும்.
(நூல் : பத்ஹ‚ல் பாரி, பாகம் :3, பக்கம் : 462)
இந்த செய்தி அதா நல்ல நிலையில் இருந்தபோது கேட்டதால் இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதே! மேலும் பின்வரும் நபிமொழியும் ஆதாரப்பூர்வமானதே!

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்து கல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல் : அஹ்மத் (13434)

Post a Comment

1 Comments

  1. Kalpitiya Voice,

    Avoid this kind of religious subjects. This will lead to nowhere and might invite further controversies.

    ReplyDelete