கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும் இதற்கு வெளியே உள்ள குள்ளநரி குறு நில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு, நேற்று பாலமுனையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட் டில் சிறப்புரையாற்றிய நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மறைந்த தலைவரின் பாசையில் தேசிய மாநாட்டைச் சொல்வதாக இருந்தால் கட்சி ஆதரவாளர்களின் பெருநாள் என்று சொல்லலாம். இந்தப் பெருநாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவதற்கு எங்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாலமுனை மத்திய குழுவுக்கும், ஏனைய அயல் கிராமத்து கட்சியின் போராளிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாங்கள் பல சவால்களை எதிர் கொண்டிருந்தோம். இந்த மாநாட்டில் கூட அறிக்கைகள் மூலமாக சில சவால்களை எதிர்கொண்டோம். அதனையிட்டு அலட்டிக் கொள்ளாமல் மிகவும் அமைதியாக இந்த மாநாட்டை நாங்கள் நடத்தியுள்ளோம். இந்த நாட்டிற்குப் பின்னர் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்று பல எதிர் கூறுதல்களைச் சொன்னாலும், இந்தப் பெரும் மக்கள் சனத் திரளுக்கு முன்னால் இந்த இயக்கத்தின் மரச்சின்னத்தை, அதன் உறுதியை அழிப்பதற்கு யாரும் இடங் கொடுக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் பறைசாற்ற விரும்புகின்றோம்.
கட்சி பற்றிய விமர்சனங்களை கட்சிக்குள்ளேயே செய்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தும் பத்திரிகைகளின் ஊடாக கட்சியை விமர்சிப்பவர்களுக்கு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நேற்று கட்சியைச் சேர்ந்த இருவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருக்கின்றேன். இன்னும் ஒரு சிலரை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை இன்று நள்ளரவு எடுக்கத் தீர்மானித்திருக்கின்றேன். இந்தக் கட்சியை கட்டுக்கோப்பான இயக்கமாக வளர்த்தாக வேண்டும். இதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த நாட்டின் அரசியல் தலைமைகளுக்கு முன்னால் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி இந்த சமூகத்தின் உண்மையான அபிலாசைகளை எடுத்துரைப்பதற்கு இருக்கின்ற அந்த வாய்ப்பை யாராவது தடுக்க முனைந்தால் அதனால் அவர்களுக்கு எந்த நன்மைகளும் இருக்கமாட்டாது.
எங்களுக்குள் என்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ளலாம். கட்சிக்குள் ஜனநாயக ரீதியாக கதைப்பதற்குரிய வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டு பத்திரிகை வாயிலாக அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கூலிக்கு எழுதுகின்றவர்களை வைத்துக் கொண்டு இக்கட்சியையும், தலைமையும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே இருப்பதனால் அம்பாறை மாவட்டத்திற்குரிய அமைச்சர் பதவி பறி போய் உள்ளதென்று கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சியின் தலைமை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை அலங்கரிக்கின்ற அரசியல் கொள்கையைத்தான் எமது மறைந்த தலைவர் காட்டியுள்ளார்.
எனக்கு வழங்கிய தலைமை என்பது அம்பாறை மாவட்ட மக்கள் வழங்கிய மகுடமாகும். சாய்ந்தமருது மண்ணிலே என்னுடைய தலையிலே சூடப்பட்டுள்ள இந்த மகுடத்தை இன்னும் நான் தாங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றால் அதற்கு இந்த மாவட்டப் போராளிகள்தான் காரணமாக இருக்கின்றார்கள்;. அவர்களுக்காக இக்கட்சியை தியாகத்துடன் முன்னெடுக்கும் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதே நேரம், கட்சியுடன் முரண்பட்டுள்ள அனைவரும் இதற்கு வெளியே உள்ள குள்ளநரி குறுநில மன்னர்களின் அரசியலுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடையில் அமராமல் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
நாங்கள் நிறைய சவால்களை எதிர் கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் யாப்பு, தேர்தல் சீர்திருத்தம் என்று பல விடயங்கள் உள்ளன. இந்த ஆட்சியின் பங்காளர்கள் என்ற வகையிலும், நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி, பிரதமர் என்ற தைரியத்தோடு இவற்றிக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முன்பெல்லாம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற அடிப்படையிலே நாங்கள் இருக்க வேண்டிய நிர்ப்பந்தங்களை ஆக்கியவர்கள் இன்று மேடையில் வந்து வெறும் நாடகமாடுவதற்கு சேட்டுக்களையும் அணிந்து கொண்டு மேடையில் அமரும் அசிங்கம் கண்டு மிகவும் வேதனைப்படுகின்றேன். இந்த நாடகம் இன்றோடு முடிவுக்கு வர வேண்டும். இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.
இவர்கள் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியை கைவிட்டு பதவி இருந்தால்தான் இந்தக் கட்சியில் நாங்கள் ஒட்டிக் கொண்டிருந்தோம் பதவிகளுக்காகவே வக்காளத்து வாங்கினோம் என்ற கேவலமான நிலைக்குப் போகாமல், தங்களை தவறுகளை உணர்ந்து இதனைப் பலப்படுத்துவதற்கு வந்து சேர்ந்து செயற்படுமாறு கேட்கின்றேன்.
மேற்படி மு.கா. வின் தேசிய மாநாட்டில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஈ.பி.டி.பி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர்கள் மனோகணேசன், திகாம்பரம், சரத்பொன்சேகா, தயாகமகே, இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், பிரதி யமைச்சர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, எஸ்.சுமந்திரன், எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், ஈரான், ஈராக், பலஸ்தீன், எகிப்து, லிபியா, பாகிஸ்தான், குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராஜ்யம், ஓமான், பங்களாதேஷ், மலேஷியா நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், மலேசிய ஆளுங் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments