Subscribe Us

header ads

சரஸ்வதி வித்தியாலயத்துடன் இணைந்ததாக நடாத்தப்பட்டுவரும் சரஸ்வதி பாலர் பாடசாலை நிகழ்வுக்கு பெரியநீலாவணையிலுள்ள முக்கியஸ்தர்கள் விசனம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்துடன் இணைந்ததாக நடாத்தப்பட்டுவரும் சரஸ்வதி பாலர் பாடசாலையில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ள ஆண்டிறுதி கலை விழா நிகழ்விற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அலுவலக அதிகாரிகள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது தொடர்பில் பெரியநீலாவணையிலுள்ள முக்கியஸ்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த விழா ஏற்பாடு தொடர்பில் குறித்த பாடசாலை ஆசிரியர்களிடம் வினவியபோது, தனக்கு இதுவிடயமாக எதுவும் தெரியாதெனவும், அதிகாரிகளை அழைப்பது மற்றும் அழைப்பிதழ் தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரே முடிவு செய்து ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பெரியநீலாவணை மக்களை அரசியல்வாதிகளிடம் இருந்து தூரப்படுத்தும் செயற்பாடாகவே எண்ணத்தோன்றுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வில் கிராமத்தின் அனைத்து செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்லும் கோயில் நிர்வாகிகள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் என எவரும் அழைக்கப்படாமல் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதானது தனது அரசியல் சாணக்கியமற்ற நிலையை எடுத்துக்காட்டுவதாகவும், எதிர்காலத்தில் இக்கிராமத்தை அபிவிருத்தியிலிருந்து புறம்தள்ளும் ஒரு செயற்பாடாகவும் தாம் கருதுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மாணவர்களின் கல்வி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் இலாபங்களுக்கப்பால் கிராமத்தின் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்படுவன் மூலமே கல்வியின் எதிர்பார்க்கப்படும் அடைவு மட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும். இது தொடர்பில் கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட வேண்டுமென கிராம முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(ஜகசபஸ்)


Post a Comment

0 Comments