மக்கா ஹரம் ஷரீப் விபத்தால் ஹஜ் யாத்திரிகர் கடமைக்கு தடங்கல் ஏற்படாதென முஸ்லிம் உலகிடம் சவுதி அரேபியா உறுதி வழங்கியது.
மக்கா ஹரம் ஷரீபில் கிரேன் சரிந்து விழுந்த மோசமான விபத்தினால் ஹஜ் கடமைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சவூதி அரேபியா முஸ்லிம் உலகிடம் உறுதி அளித்துள்ளது. இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர்.
இரு புனித பள்ளிவாசல்களினதும் காவலரான மன்னர் சல்மான் கடந்த சனிக்கிழமை பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து விபத்தின் சேதங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் அல்- நூர் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயத்துக்குள்ளானவர்களிடம் சுகம் விசாரித்தார்.
கிரேன் விழுந்த பகுதியில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை இரண்டு தினங்களுள் சரிசெய்ய, மக்கா ஆளுநர் இளவரசர் காலித் அல் பைஸால் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் விபத்தில் காயத்துக்கு உள்ளானவர்கள் தமது ஹஜ் கடமையை பூர்த்தி செய்வதற்கு உதவுவதாக உறுதி அளித்திருக்கும் இளவரசர் காலித், இவர்கள் தமது ஆன்மீகக் கடமைகளைச் செய்வதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கார்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கிரேன் விபத்தால் சேதமான பகுதிகளை சரி செய்வதற்கு இறுதிக் காலக்கெடுவாக இன்று திங்கட்கிழமை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாக அமையவிருக்கும் இன்றைய தினமே சவூதிக்கு வெளியில் இருந்து யாத்திரிகர்கள் வரவேற்கப்படும் கடைசி தினமாகவும் உள்ளது. ஹஜ் கடமைக்காக சவூதியை அடைந்திருக்கும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனை தொட்டிருப்பதாக சவூதி தரவுகள் குறிப் பிடுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையின் போது இந்த கிரேன் விபத்து நிகழ்ந்த போதும் பெரிய பள்ளிவாசலில் அன்றைய தினத்தின் மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகைகளில் தடங்கல் ஏற்படவில்லை. எனவே இந்த விபத்து அங்கு ஆன்மீக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இது காட்டுவதாக உள்ளது.
காயத்திற்கு உள்ளானவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற பெரிய பள்ளிவாசலுக்கு வருவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அம்புலன்ஸ் வண்டிகளை அரசு வழங்கும் என்று மக்கா ஆளுநர் குறிப்பிட்டார்.
இளவரசர் காலித், மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் நயிப் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது கவலையை வெளிட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைகளை நடத்த இரு குழுக்களை சவூதி அரசு நியமித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் காயமடைந்த 95 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வெளியேறி இருப்பதோடு மேலும் 110 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் சவூதி நிர்வாகம் செய்துள்ளது.
இந்நிலையில் சவூதியில் இருக்கும் பல நாடுகளினதும் தூதரகங்கள் தமது நாட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மினாவுக்கு அருகில் இருக்கும் பிரேத கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்ப தோடு அவை புகைப்படம் எடுக்கப்பட்டு ஏனைய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிடிக்கப்படும் புகைப்படங்கள் தூதரகங்களுக்கு அனுப் பப்பட்டு அடையாளம் காணபடுகிறது.
பெரும்பாலும் அனைத்து யாத்திரிகர்களும் தமது கைகளில் அடையாளப்பட்டி அணிவது கட்டாயமாகும். இந்த உலோகப் பட்டியில் அவர்கள் இருக்கும் கட்டடம், ஹஜ் வழிகாட்டியின் அடையாளம் ஆகியன குறிப்பிட்டிருக்கும். இந்த பட்டியை கொண்டு உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது இலகுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் அனைத்து யாத்திரிகர்களும் இந்த பட்டியை அணிந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புனித ஹஜ் கடமை ஆரம்பமாக இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் விபத்து இடம்பெற்று ஒரு மணிநேரத்திற்குள்ளேயே பாரிய எண் ணிக்கையிலான யாத்திரிகர்கள் புனித கஃபாவை வலம்வர (தவாப்) ஆரம்பித்தனர்.
-Madawala News-
-Madawala News-
0 Comments