எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார செயற்பாடுகள் யாவும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. இந்நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய தினம் தமது இறுதிப் பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன. அந்தவகையில் கடந்த 7 ஆம் திகதி ஆம்பமான பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரசார போர் இன்று நள்ளிரவுடன் ஓய்வடைகின்றது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை எட் டாவது பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இதேவேளை இன்று வௌ்ளிக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் அரசியல் கட்சிகளோ வேட்பாளர்களோ எவ்விதமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார்.
குறிப்பாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துதல் சிறியளவிலான கூட்டங்களை நடத்துதல் விடுகளுக்கு சென்று வாக்களிக்குமாறு கோருதல் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட எந்தவொரு பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் குருணாகல் மாவட்டத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி பிரசாரக் கூட்டம் மருதானையிலும் இன்றைய தினம் நடைபெறவுள்ளன.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயகக் கட்சி தமிழர் விடுதலை கூட்டணி இலங்கை தொழிலாளர் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் தமது இறுதிக் கட்ட பிரசார கூட்டங்களை இன்றைய தினம் நடத்தவுள்ளன.
மஹிந்த தலைமையில்
குருணாகலில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டமானது அதன் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளனர்.
ரணில் தலைமையில்
கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களான சம்பிக்க ரணவக்க ராஜித்த சேனாரட்ன மற்றும் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
கூட்டமைப்பின் கூட்டம்
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அவர்களை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், உரையாற்றவுள்ளனர்.
வாக்காளர் அட்டை விநியோகம்
இது இவ்வாறு இருக்க பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் விசேட விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலையங்களுக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
வாக்களிப்பு
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும்.
12344 வாக்களிப்பு நிலையங்கள்
அத்துடன் நாடு முழுவதும் 12344 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.
17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பாக 6151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
2 இலட்சம் அரச ஊழியர்கள்
மேலும் தேர்தல் செயற்பாடுகளுக்காக சுமார் இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்களிப்பு நடவடிக்கைகளில் 125000 அரச ஊழியர்களும் வாக்கு எண்ணும் செயற்பாடுகளில் 75000 அரச ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர்.
70549 பொலிஸார் பாதுகாப்பு கடமையில்
தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கடமையில் 70549 பொலிஸாரும் 4225 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் திரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்களிப்பு நிலையங்களுக்கு மட்டும் 24798 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இதனை விட 2885 நடமாடும் பாதுகாப்புக் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 49 வாக்கெண்ணும் நிலையங்கள் தொடர்பில் 3683 பொலிஸார் பாதுகப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 17 ஆம் திகதி மாலையில் இருந்து கடமையில் இருப்பர். இவ்வாறு தேர்தல் செயற்பாடுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

0 Comments