மல்லிகையின் இலை, பூ, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒரு துணியில் கட்டி, வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
இலையை நன்றாக அரைத்து, காலில் ஆணி உள்ள இடத்தில் மருந்தாகப் பயன்படுத்தலாம். வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் உடனடியாக வீக்கம் குறையும்.
மல்லிகை பூ ஈஸ்ட்ரோஜன் செயல்பாட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே, பெண்கள் மெனோபாஸ் கட்டத்தில், மல்லிகை பூவைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, பனங்கல்கண்டு சேர்த்து, கஷாயமாகக் குடிக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரப்பதால் அவதிப்படும் தாய்மார்கள், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால், பால் சுரப்பு குறையும்.
இரவில் பூப்பதினால், நறுமணம் அதிகமாக இருக்கும். மல்லிகையைத் தலையில் வைப்பதால், மூளையின் கீழ்ப்பகுதி வெப்பமடைவதைத் தடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். தலையில் வைத்துக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள், தலையணையில் வைத்து உறங்கலாம். இது மனநிலையை மாற்றும். மனக் கலக்கத்தைப் போக்கும். நேசத்தைத் தூண்டும்.
வெயில் மற்றும் உடல் வெப்பத்தால் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் வரும்போது கண்களில் மல்லிகைப் பூவைவைத்து, கைக்குட்டையால் சிறிது நேரம் கட்டியிருந்தால், கண்கள் குளிர்ச்சியடையும்.
நல்லெண்ணெயுடன் சிறிது மல்லிகைப் பூ எண்ணெய் சேர்த்து, உடலில் மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்கும். குளிர்ச்சி யடையும்.
தேயிலையுடன், கைப்பிடி அளவு மல்லிகைப் பூவைச் சேர்த்து, நீரில் கொதிக்கவைத்து ‘கிரீன் டீ’ போல் அருந்தலாம். புத்துணர்ச்சி கிடைக்கும். மல்லிகை எண்ணெய், உடலில் தேமல் வராமல் தடுக்கும், தோல் சுருக்கத்தைக் குறைக்கும், நீர்ச்சத்தை அதிகரித்து, முகம் பொலிவு பெறச் செய்யும்.
மல்லிகை வாசனை, சிலருக்கு ஒவ்வாது. அதற்குக் காரணம், மல்லிகையில் உள்ள எண்ணெய். இது, நேரடியாக நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மைகொண்டது. இதனால், சிலருக்கு மயக்க உணர்வு வரலாம். அவர்கள் மல்லிகையைத் தவிர்ப்பது நலம்.

0 Comments