1. மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த
தலைவர் ஒருவர் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க
தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து
கொள்ள சென்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்த
புதிய தலைவர் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2. அதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின்
தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய
தேசியக் கட்சிக்கு சார்பான நிலைப்பாடு அவரது நேற்றைய உரையில் தெளிவானதாக
கூறியுள்ளார்.
3. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மாலை ஆற்றப்பட்ட உரை குறித்து தான்
மிகவும் கவலையடைந்துள்ளதாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப
தலைவர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தான் இவ்வாறு கூறுவது
அமைச்சர் அல்லது கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என் அடிப்படையில் அல்ல எனவும்
கட்சியை நேசிக்கும் ஒருவர் என்ற வகையிலேயே எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில்
இவ்வாறான கருத்துக்கள், கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தான்
நம்புவதாக அவர் இதன் போது கூறினார். இதனால் கட்சியின் செயற்குழுவை அவசரமாக
கூட்டி எதிர்வரும் தேர்தலுக்கு முகம் கொடுப்பது குறித்து கலந்துரையாட
வேண்டும் எனவும் ஜனக பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.
4. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மிகவும்
வெறுப்படைந்துள்ள அந்த கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர்
இன்று பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். அமைச்சர் பதவியில்
இருந்து இன்று விலக போவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர
அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு பின்னர்,
தற்போதை அரசியல் நிலைமை தொடர்பில் மிகவும் வெறுப்புக்கு
உள்ளாகியுள்ளதாகவும் இதனால், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக
மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
-Jaffna Muslim-


0 Comments