Subscribe Us

header ads

எகிப்தில் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை: தீர்ப்பு மிகுந்த கவலை அளிக்கிறது - அமெரிக்கா



எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது பிரிவினைவாத கொள்கைகளால், அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.       

முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பதேய், துணைத்தலைவர் கைரத் அல்-ஷேட்டர், இஸ்லாமிய மத குரு யூசுப் அல்-காரதாவி ஆகியோரும் அடங்குவர்.       

இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட் முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை அனுப்பி வைத்தார். அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள் அப்பீல் செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2-ந்தேதி, இவ்வழக்கில் கோர்ட்டு தனது இறுதி முடிவை அறிவிக்கும்.  

முர்சியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் சினாய் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். இதற்கிடையே, முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதித்ததற்கு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிரிகளை பழிதீர்க்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. துருக்கி நாட்டு அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோகனும் கண்டனம் தெரிவித்துள்ளார். கற்காலத்திற்கு எகிப்து திரும்பி வருவதாகவும், மேலை நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா இது மிகுந்த கவலை அளிப்பதாகவும், ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.    

2012-ம் ஆண்டு அதிபர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கொன்று குவிக்க உத்திரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சிக்கு கடந்த மாதம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments