துபாய் கடற்கரையில் கூடியிருந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 3 ஆயிரம் ஸாண்ட்விச்களை இலவசமாக வழங்கிய KFC!
துபாயில் மாலை வேளைகளில் காற்றாடிகளை பறக்க விடுவதற்கென்றே ஒரு கடற்கரை
பகுதி உள்ளது. இப்பகுதியை காற்றாடி பீச் என்று அங்குள்ளவர்கள்
அழைப்பதுண்டு.
நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் உச்சிவெயில் வேளையில் இந்த
கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் காற்றாட அமர்ந்திருந்திருந்தபோது
வானத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கே.எப்.சி. என்ற மூன்றெழுத்துகளை கொண்ட
ராட்சத பக்கெட்டை சுமந்துவந்த ஒரு ஹெலிகாப்டர் வானத்தில் சிறிது நேரம்
வட்டமடித்து, மெதுவாக காற்றாடி கடற்கரையில் தரையிறங்கியது.
அந்த ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்கிவந்த கே.எப்.சி. ஊழியர்கள் அந்த
பெரிய பக்கெட்டை திறந்தனர். ஆவி பறக்கும் சூட்டுடன் பக்கெட்டினுள்
வைத்திருந்த சுமார் 3 ஆயிரம் சிக்கன் ஸாண்ட்விச்களை அங்கு
கூடியிருந்தவர்களுக்கு இலவசமாக வழங்கினர்.
இதன் மூலம், ‘நீங்கள் எந்த இடத்தில் இருந்து அழைத்து ஆர்டர் தந்தாலும்
உங்களுக்கு சுடச்சுட பரிமாற நாங்கள் தயார். அது எவ்வளவு பெரிய ஆர்டராக
இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை டெலிவரி செய்வோம்’ என்பதை
துபாய் மக்களுக்கு இந்த இலவச சேவை மூலம் கே.எப்.சி. மீண்டும்
உணர்த்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேடில் கடந்த 25 ஆண்டுகளாக கால் பதித்துள்ள கெண்ட்டுக்கி
பிரைட் சிக்கன் எனப்படும் கே.எப்.சி.க்கு ஐக்கிய அரபு எமிரேடின் 7
நாடுகளிலும் மொத்தம் 122 கடைகள் உள்ளது, குறிப்பிடத்தக்கது.



0 Comments