டெங்கு காய்ச்சலினால் காத்தான்குடி நகரசபை பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இன்று (08) ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, எம்.எச்.சிபான் (26) எனும் இந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்தவருக்கு டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி - ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இந்த சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது, காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுமி அங்கு உயிரிழந்துள்ளார். இவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.கனேசநாதன் மேற்கொண்டார்.
சிறுமியின் சடலம் விசாரணையையடுத்து உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.


0 Comments