புதிய காத்தான்குடியில் சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
புதிய காத்தான்குடி 2ம் குறிச்சி அட்வகேட் அப்துல் காதர் வீதியில் வசிக்கும் 10வயது சிறுவன் ஒருவன், தனது சகோதரனுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது அருகிலுள்ள தேனீர் கடையொன்றின் 67 வயதுடைய உரிமையாளர் குறித்த சிறுவனையும் அவரது சகோதரனையும் அழைத்துள்ளார்.
பின்னர் சிறுவனின் சகோதரனுக்கு டொபியொன்றை கொடுத்தனுப்பிவிட்டு குறித்த சிறுவனை கடைக்குள் எடுத்து கடையை மூடிவிட்டு சிறுவனுக்கு குளிர்பானம் வழங்கி விட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
வீட்டுக்குச் சென்ற சிறுவன் நடந்த விடயத்தை தனது தாயாரிடம் கூறவே, தாய் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சிறுவனை அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போது குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாகவும் அவரைத் தேடிவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments