கொதித்தெழுந்த
அலை வீச்சில்
அகப்பட்டுப் போனது
பல்லாயிரம் ஜீவன்கள்,
...
2004இன் 12 வது மாதத்து
26ஆம் நாள் அது...
பட்சிகளின் கீச்சிடுகளோடும்
காலைத்தென்றலின் பூபாலத்தோடும்
விடியவேண்டிய
அந்த இரவு
விம்பல்களைச் சேர்த்து
விசும்பல்களோடு சேர்ந்து
ஓலமாய் விடிந்தது.
...
பார்க்கும் இடமெங்கும்
சடலத்து மயம்
கேட்கும் செவிப்புலனில்
மயானத்துக் குரலோசை.
...
பிள்ளைக்குத் தந்தை இல்லை
தந்தைக்குத் தாயில்லை
தாய்க்கு மகளில்லை
மகளுக்குச் சொந்தமில்லை
சொந்தத்திற்கு யாருமில்லை
மொத்தமாக மடிந்ததனால்...
...
உதிரங்கள் ஊனமாகிப் போனதனால்
உதிரி, உதிரியென்று
உதிர்ந்துபோன உறவுகளின்
உருக்குலைவிலே
உருகிக் கொண்டிருக்கிறது
உலகம்.
மரணத்து விழிம்பின் வழியில்
விடியாத இரவுகளோடு
இவனது பயணம்.
'ஈரக்கரையின் ஓரத்திலிருந்து'
கவிதை பாடியவர்: புல்மோட்டை ஜமால்தீன் அஸ்ஹர்
தொகுப்பு ஏ.எல்.றபாய்தீன்பாபு


0 Comments