மலைநாட்டில்
காணி-வீட்டு உரிமையையும், நுவரேலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபை
ஆட்சியுரிமையையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேரம் பேசி கேட்டு வாங்கி
கொடுக்க முடியாதவர்கள்தான், இந்த முறையும் அவருக்காக மலைநாட்டு மக்களிடம்
வந்து வாக்கு கேட்கிறார்கள். இதென்ன மலைநாட்டு கூத்து? என ஜனநாயக மக்கள்
முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் நடத்திய,
மலையக சிந்தனையாளர் எம். வாமதேவனின் "மலையகம்-சமத்துவ அபிவிருத்தியை
நோக்கி" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கருத்துரை வழங்கிய மனோ கணேசன்
மேலும் கூறியதாவது,
அம்பகமுவை, நுவரேலியா ஆகிய இரண்டு நுவரேலியா மாவட்ட பிரதேச சபைகள்தான்,
பிரதேச செயலகங்கள்தான் இந்தநாட்டிலேயே மிகப்பெரிய பிரதேச சபைகள், பிரதேச
செயலகங்கள். ஒவ்வொன்றிலும் 150,000 பேர் வாழ்கிறார்கள். பொகவந்தலாவையில்
இருந்து கினிகத்தேனை வரை, அம்பகமுவை பிரதேச சபை பரந்து விரிந்து
இருக்கிறது. அதேபோல், ஹட்டனுக்கு மேலே இருந்து கந்தபொல எல்லை வரை நுவரேலியா
பிரதேச சபை பரந்து விரிந்து இருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?
இவற்றை பிரித்து ஒவ்வொன்றிலும் குறைந்த பட்சம் ஆறு பிரதேச சபைகளை உருவாக்கி
தரும்படி நீண்ட காலமாக மலையகம் கோரி வருகிறது. அதன்மூலம் வாமதேவன் சொல்வது
போல பிரதிநிதித்துவ குறைப்பாட்டை நீக்குங்கள் என்கிறோம். ஆனால், ஒன்றும்
நடக்க வில்லை. இதோ, அதோ என்கிறார்கள். வரும், ஆனால் வாராது என்பது போல் அது
இதுவரையில் நடைபெறவில்லை. தமிழனுக்கு அங்கே மென்மேலும் பிரதேச சபைகளும்,
அவற்றில் மந்திரிகளும், அதன்மூலம் ஆட்சியுரிமையும் கிடைக்கக்கூடாது என
பேரினவாதம் நினைக்கின்றது. அதுதான் உண்மை.
அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் பகுதிகளை சேர்த்து ஒரு கடலோர
நிர்வாக அலகு கேட்கிறது. அதுபற்றிய சரி, பிழை எனக்கு தெரியாது. ஆனால்,
அதையும் பேரினவாதம் மறுக்கிறது. வடக்கு, கிழக்கு மகாணங்களை சேர்த்து
தரும்படி அங்கே தமிழர்கள் கேட்கிறார்கள். அதையும் பேரினவாதம் மறுக்கிறது.
ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் சேர்த்து கேட்டாலும் இல்லை. மலையகத்தில்
இருப்பதை பிரித்து கேட்டாலும் இல்லை. இதுதான் இந்நாட்டில் இன்று தமிழ்
பேசும் மக்களின் நிலைமை.
வடக்கில், கிழக்கில் தமது நிலங்களை கூட்டிணைத்து தனி நிர்வாக அலகு
கோருவதைதானே மறுக்கிறீர்கள். நாங்கள் இங்கே மலையக தமிழர்களின் மிகப்பெரிய
பிரதேச சபைகளை இன்னமும் சிறிய அலகுகளாக பிரித்துத்தானே கேட்கிறோம். அதுவும்
இந்த நாட்டிலே மற்ற இடங்களில் 10,000 பேருக்கு ஒன்று என இருக்கின்றனவே.
அதைதானே கேட்கிறோம். அதையேன் தர மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்க
இங்கே மலையகத்தில் எவருக்கும் திராணியில்லை. அதுபோல் மகிந்த சிந்தனையிலும்,
தேர்தல் கால வாக்குறுதிகளிலும், வரவு-செலவு திட்ட உரையிலும் சொல்லப்பட்ட
வீட்டு உரிமையையும், தரிசு நில காணி பகிர்ந்து அளிப்பதையும் ஏன் தர
மறுக்கிறீர்கள் என ஆளுவோரிடம் தட்டி கேட்கவும் இங்கே மலையகத்தில்
எவருக்கும் திராணியில்லை. இவற்றையெல்லாம் தர்க்கரீதியாக எடுத்து கூற
அறிவார்ந்த சிந்தனையும் இல்லை. தெரிந்தது எல்லாம் மகிந்த சிந்தனைதான்.
அங்கே இந்த காணி, வீட்டு உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. அதையும் படித்து
அறிவதில்லை.
இந்த இலட்சணத்தில், ஆளுவோருக்கு மீண்டும், மீண்டும் வாக்கு கோரி மலைநாட்டு
மக்களிடம் வந்து வாக்கு கேட்க மட்டும் தெம்பு, திராணி, எல்லாம் இருக்கிறது.
இதென்ன கூத்து? அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டாம் என்று நான்
சொல்லவில்லை. அங்கேயே இருங்கள். அனுபவியுங்கள். கொஞ்சம் மக்களையும்
பாருங்கள். அநீதிகளை சுட்டிகாட்டினால் என்னை பார்த்து அறிக்கை அரசியல்
செய்கிறார் என்று குற்றஞ்சாட்டி தப்ப முயல்கிறீர்கள். இது அறிக்கை அரசியல்
இல்லை. அறிவு அரசியல். உண்மை அரசியல். எத்துனை அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில் நான் இந்த உண்மைகளை மூடி மறைக்க விடாமல் தடுத்து நின்று நான்
எடுத்து கூறுகிறேன் என்பது எனக்குதான் தெரியும். நான் உண்மைகளை கூற
வேண்டும் என இந்த நாட்டின் நாலாபுறமும் வாழும் தமிழ் பேசும் மக்கள்
விரும்புகிறார்கள்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments