-கலாநிதி இனாமுல்லாஹ் மசிஹுத்தீன் -
கடந்த நான்கு வருடங்களாக பொதுபல சேனா அமைப்பு இலங்கை வாழ்
முஸ்லிம்களுக்கு தமது எதிர்கால அரசியல் தெரிவு எவ்வாறு அமையவேண்டும்
என்பதனை எல்லா வகையான வன்முறை வழி முறைகள் மூலமாகவும் மிகத் தெளிவாக
கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
ஹலாலில் தொடங்கி அளுத்கமை வரை நான்கு வருடகால கடும்போக்கு கற்கைகளை
நிறைவு செய்து எதிர்கால மேலதிக கற்கைகளுக்கான கற்கை நெறிகள், பாடத் திட்டம்
மியன் மாரில் இருந்து வருகை தந்த பேராசிரியர் அஸின் விராது முன்னிலையில்
கொழுப்பு சுகததாஸ உள்ளரங்கு மாநாட்டில் மிகத் தெளிவான ஆழ அகலங்களுடன்
அறிமுகப் படுத்தி வைக்கப்பட்டது.
அன்றைய அறிவிப்புக்களின் பிரகாரம் தமது அடுத்த இலக்கு தமது இலக்குகளை
அடையச் செய்ய முடியுமான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதென்றும் அதற்காக
இலங்கையில் உள்ள பௌத்த மத வழிபாட்டுத் தளங்கள், சில எச்சில் பொறுக்கி
ஹிந்துத்துவ முகவர்களூடாக ஐந்து மில்லியன் வாக்குகளைத் திரட்டி தமது
கதானாயனை வெல்ல வைப்பது என்றும் கூறியுள்ளனர்.
என்றாலும் அரண்மனை வாசலில் “மகாராசரே சரணம்” என -சரணா-கதியாய்
சங்கமித்திருந்த தனித்துவத்தின் தாராக மந்திரக் குஞ்சுகளுக்கு தெளிவு
போதாமல் இருப்பதால் அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் குறித்து மக்கள்
அபிப்பிராயம் கோரவுள்ளனராம், அவர்களுக்கு புரிகின்ற பாஷையில் சொல்லிக்
கொடுக்க
“போராளிகளே புறப்படுங்கள்..!” என்று எங்கிருந்தோ ஒரு அசரீரி மட்டும் கேட்கிறது.
முஸ்லிம்கள் ஆதரவு இல்லாத அரச அதிபர் ஆபத்தானவர், இனி எவர் வந்தாலும்
கடும்போக்காளர் நடவடிக்கைகள் தொடரும் எனவே எந்த ஒட்டுண்ணியும் கழன்று விழக்
கூடாதென அரசியல் ஞானோபதேசம் செய்யும் சாத்திரங்களும் இருக்கத் தான்
செய்கின்றன, அதேவேளை எவன் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை வெல்லுகின்ற
குதிரையிலேயே நாம் பந்தயம் கட்டுவோம் என தலைமைகளை விஞ்சி சில வித்துவக்
கிறுக்கர்கள் பேரம் பேசல்களை நிறைவு செய்து காத்திருப்பதாகவும் அறியக்
கிடைக்கிறது.
ஒருவகையில் ஒட்டுண்ணிகள் ஒட்டியிருப்பதே “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”
எனும் அரசியல் கலாச்சாரத்தை முன் கொண்டு செல்ல உதவும் என சில நண்பர்களும்
கூறுகிறார்கள்.
என்றாலும் ஏப்ரலில் வருமென எதிர்வு கூறப்படும் பொதுத் தேர்தலில்
முஸ்லிம் சமூக அரசியலில் முழுமையான ஒரு மாற்றம் வருமா என்பதுவும் இன்றும்
கேள்விக் குறியாகவே இருக்கிறது..!
0 Comments