-கோகிலா பத்மநாதன், நவமணி ஆரம்பகால ஊழியர்-
இலங்கையில் முதன்
முதலாகஆரம்பிக்கப்பட்ட தமிழ் பத்திரிகை "உதய தாரகை'. இது 1841இல்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. அதன் பின்னர் 1860ஆம் ஆண்டு
கொழும்பிலிருந்து மீரா மொகிதீன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு "தினத் தபால்'
என்ற தினசரி வெளிவந்தது.
அதன் பின்னர் பல தமிழ் பத்திரிகைகள்
தொடர்ந்து வெளியாகி சில தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில்
சில பத்திரிகைகள் காணாமல் போய்விட்டன. இவ்வாறான நிலையில், 1996ஆம் ஆண்டு
ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புதுமை
பத்திரிகையாக ப்ரீலங்கா நியூஸ் பேப்பர் என்ற நிறுவனத்தினூடாக வெளிவந்தது
நவமணி.
அதன் முகாமைத்துவ பணிப்பாளராக எம்.ரி.எம். ரிஸ்வியும்,
நிறைவேற்றுப் பணிப்பாளராக தாஹா எம்.
முஸம்மிலும் ஆசிரியர்பீட பணிப்பாளராக
எம்.பி.எம். அஸ்ஹரும் பணியாற்றினார்கள்.
நவமணியின் முதல் பிரதம
ஆசிரியராக கே.எஸ். சிவகுமாரன் 1996 ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை
கடமையாற்றினார். அவர் பதவிவிலகிய பின்னர்,
செய்தி ஆசிரியராக கடமையாற்றிய
ரீ. முத்தையா சிவலிங்கம் பிரதம ஆசிரியராக பதவியேற்று 1998 ஆம் ஆண்டுவரை
பணிபுரிந்தார். அவர் விலகியதன் பின்னர் நவமணி ஆசிரியர்பீட பணிப்பாளராக
ஆரம்பம் முதல் செயற்பட்ட எம்.பீ.எம். அஸ்ஹர் பிரதம ஆசிரியராக பதவியேற்றார்.
இவர்,
பத்திரிகைத் துறையில் பலகாலம் சேவையாற்றியவர். பத்திரிகையுலக ஜாம்பவான்
எஸ்.ரி. சிவநாயகத்தின் கீழ் பணியாற்றிய இவர், அவரைப் போன்றே பத்திரிகையுலக
ஜாம்பவானாக திகழ்ந்தார். நவமணி வெளிவருவதற்கு முன்னர் 25 வருடகாலம்
வீரகேசரி பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளராக கடமையாற்றியவர். இவரின்
பத்திரிகைத்துறை அனுபவங்கள் நவமணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.
1996ஆம்
ஆண்டுக்கு முன்னர் வெளி வந்த அத்தனை பத்திரிகைகளுக்கும் மாற்றமான முறையில்
அறிவுபூர்வமான ஒரு தேசிய பத்திரிகையாக நவமணி வெளிவந்தது. நவமணியின்
செய்திகள் பக்கச்சார்பற்ற முறையில் சகலரையும் சமப்படுத்தி வெளிவந்தன.
இந்நாட்டில் வெளிவரும் ஜனரஞ்சகமான சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுக்கு நிகராக
நவமணியின் செய்திகள் இருந்தன.
அப்பத்திரிகைகளில் அரசியல்துறை அந்தரங்கச் செய்திகள் பல வெளிவந்தன.
ஆனால், தமிழ் பத்திரிகை துறையில் நவமணி வரும்வரை எந்தப் பத்திரிகையும்
அவ்வாறான விடயங்களை பிரசுரிக்
கவில்லை. நவமணி அவ்வாறான வித்தியாசமான
விடயங்களை தேடித்தேடி பிரசுரித்ததன் மூலம் செய்திச் சேவையை புதுமையான
முறையில் வாசகர்களுக்கு வழங்கியது. இதனால் குறுகிய காலத்துக்குள்
வாசகர்களிடையே ஜனரஞ்சகமானது.
நவமணி பத்திரிகையின் புதுமையான ஒரு
விடயம் என்னவெனில், அது ஏனைய பத்திரிகைகள் போன்று கவர்ச்சி காட்டும்
பெண்களின் படங்களையோ வாலிபர்களையும் மாணவர்களையும் கவரும்
வேறு எந்த
படங்களையும் அதனோடு சினிமா சம்பந்தமான எந்த விடயங்களு மின்றி சிறுவர்கள்
முதல் பெரியோர் வரை ஒன்றாக இருந்து வாசிக்கக்கூடிய விதத்தில் வெளிவந்தது.
சினிமா இல்லாமல் கவர்ச்சி காட்டும் படங்கள் இல்லாமல் பத்திரிகையொன்றை
விற்பனை செய்யமுடியுமா என்று சவால்விட்டோர் மத்தியில் நவமணி வீறுநடை போட்டு
விற்பனையாகியது.
உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும்
நவமணியின் வாசகர்கள் ஏராளம் பேர் உள்ளனர். இப்பத்திரிகை படித்தவர்,
படிக்காதவர் என்ற பாகுபாடின்றி சகலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.
இதனால் நவமணி மூலம் எழுத்தாளரானோர் பத்திரிகையாளரானோர், கவிஞர்களானோர்
பலர்.
ஆரம்ப காலத்தில் நவமணியின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க
தனிநபர்களும் நிறுவனங்களும் பெரு முயற்சி செய்தன. ஆனால் அவை எல்லாவற்றையும்
முறியடித்துக் கொண்டு நவமணி எழுந்துநின்றது. இதனை எதிர்பார்க்காத,
வீழ்ச்சியை எதிர் பார்த்திருந்த வஞ்சகர்களினால் 2002ஆம் ஆண்டு நவமணி
எரிக்கப்பட்டது. ஆனாலும் அவை எல்லாவற்றையும் பொறுமையுடன் ஏற்று சிரமத்தின்
மத்தியிலும் நவமணி தொடர்ந்தும் வெளிவருவதற்கு அதன் நிர்வாகமும் ஊழியர்களும்
ஒரு குடும்பமாக இருந்து அர்ப்பணத்துடன் வழங்கிய ஒத்துழைப்பே முக்கிய
காரணமாக இருந்தது.
நவமணி தனது வாசகர்களுக்காக பல போட்டி
நிகழ்ச்சிகளையும் நடத்தி பெறுமதியான பரிசில்களையும் வழங்கியுள்ளது. 1998ஆம்
ஆண்டிலிருந்து நவமணி யின் பிரதம ஆசிரியராக இருந்த எம்.பி.எம். அஸ்ஹரின்
திடீர் மறைவிற்கு பின்னர் (2008ஆம் ஆண்டு) அதன் பிரதம ஆசிரியராக என்.எம்.
அமீன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையிலேயே நவமணி இன்றுவரை வெளிவந்து
கொண்டிருக்கிறது.
நவமணியின் எதிர்வு கூறல்கள் பல அப்படியே
நடந்துள்ளன. விவேகமான இலங்கையர்களை உருவாக்குவதே அதன் நோக்கம்.
இனப்பிரச்சினை தீர்வுக்கும் அது தனது பணியைச் சிறப்பாக செய்து வருகிறது.
தற்போது நாட்டில் நிலவும் சமயம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
நவமணி பக்கச்சார்பின்றி நடுநிலைமை வகித்து தகவல்களை வெளிக்கொணர்வதில்
முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக சிங்கள, முஸ்லிம் கலவரங்களின்போது
முஸ்லிம் சமுதாயம் சமயோசிதமாக நடந்துகொள்ள தூண்டியதுடன், பொறுமையை
கடைப்பிடிக்க முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் ஒரு கருவியாகவும் இதன் பணி
உள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் முதலீட்டாளர்களினால் நடத்தப்படும்
ஒரு பத்திரிகை என்ற வகையில், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும்
அவர்களின் மறுக்கப்பட்ட மதச் செயற்பாடுகளுக்காகவும் தேவையற்ற விதத்தில்
பூதாகரமாக்கப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்காகவும் நவமணி ஓங்கிக் குரலெழுப்பி
வருகிறது. முஸ்லிம்களின் பக்க நியாயங்களை உலகுக்கு
எடுத்துக்காட்டியிருக்கிறது. இந்த விடயத்தில் நவமணியின் குரல் என்றென்றும்
சிறுபான்மை மக்கள் சார்பாகவே ஒலிக்கும் என்று உறுதிபடக் கூறலாம்.

முதல் வெளியீடு
0 Comments