(பிஸ்ரின் முஹம்மத்)
சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வல்லப்பட்டை பொலிஸாரால் கைது, வல்லப்பட்டை கொண்டு செல்ல முயற்சித்தவர்கள் சுங்க அதிகாரிகளால் கைது போன்ற செய்திகள் அண்மைக் காலமாக ஊடகங்களில் பரவலாக அடிபடுகின்றன. ஆனால் வல்லப்பட்டை என்றால் என்ன அது எதற்காக பயன்படுத்தப்படுகின்றது என்ற கேள்வி பெரும்பாலானோருக்குத் தோன்றுகின்றது.
வல்லப்பட்டை மூலிகை தொடர்பில் மேல்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்திய அதிகாரி எம். கே. நிமல்கருணாசிறியை மூலம் பெற்றுக் கொண்ட தகவல்களை வாசகர்களுக்கு தருகின்றோம்.
கிரினோப்ஸ் வல்லா என்ற விஞ்ஞானப் பெயரில் அழைக்கப்படும் வல்லப்பட்டை ஆங்கிலத்தில் Agar wood என அழைக்கப்படுகின்றது. இதைம லேசியா (Thymelaeaceae) என்ற குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரம் தெற்கு ஆசியாவைப் பூர்வீகமாக கொண்டதாகும். வல்லப்பட்டை எகியுலேரியா (Aquilaria) என்ற இனத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளளதாகக் காணப்படுகிறது.
வல்லப்பட்டையில் கிறினொப்ஸ் கோடேட்டா (Gyrinops caudata) கிறினொப்ஸ் டெசிபியன்ஸ (Gyrinops decipiens) , கிறினொப்ஸ் லெடமெனீ (Gyrinops ledermanii),கிறினொப்ஸ் மொலுகானா (Gyrinops moluccana),கிறினொப்ஸ் போடோகார்பர்ஸ் (Gyrinops podocarpus),கிறினொப்ஸ் ஸலிசிபோலியா (Gyrinops salicifolia),கிறினொப்ஸ் வெர்ஸ்டீஜி (Gyrinops versteegi),கிறினொப்ஸ் வல்லா (Gyrinops walla) ஆகிய எட்டுவகையான இனங்கள் காணப்படுகின்றன.
வட்ட வடிவான இலைகளைக் கொண்ட இத்தாவரம் முழுமையாக வளர சுமார் 8-10 வருடங்கள் தேவைப்படுகிறது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவங்களுக்காகவும், நறுமணப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியம் தயாரிக்கவும் எரோமா சிகிச்சை முறை என்பவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆயுர்வேத மருந்து மூலிகையாக வல்லப்பட்டை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதனையும் வரலாற்றில் காணமுடியாமல் உள்ளது. ஆரம்ப காலங்களில் வல்லப்பட்டை மரத்திலிருந்து பெறப்படும் பட்டை ஆயுர்வேத மருத்துவர்களால் காயங்களுக்கு கட்டு போடுவதற்கு வளர்க்கப்பட்டது. இதேபோல் இதன் பட்டை வெசாக்கூடு கட்டுவதற்கு, மண்வீடுகள் தயாரிப்பதற்கு வரிச்சி கட்டுவதற்கும் ஆரம்பகாலங்களில் வல்லப்பட்டை மரத்தின் பட்டை பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர இது மூலிகையாகவோ பொருளாதாரத் தாவரமாகவோ பயன்படுத்தப்படவில்லை.
அண்மைய சில வருடங்களிலேயே வல்லப்பட்டைக்கான கேள்வி உலக அரங்கில் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. வாசனைத்திரவிய தயாரிப்பில் முன்னணியில் திகழும் பிரான்ஸிலேயே இதற்கான கேள்வி அதிகரித்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. வல்லப்பட்டை மரத்தின் தண்டுப் பகுதியில் நடுவில் காணப்படும் பூஞ்சனம் போன்ற ஒருவகை பொருளுக்கே அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.
அந்தப் பூஞ்சனம் போன்ற பொருள் அதிக வாசனையுடைய ஒரு பொருளாக காணப்படுகின்றது. இதனால் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்துக்கு உலக சந்தையில் சிறந்த கேள்வி காணப்படுகின்றது.
வல்லப்பட்டை மரத்தின் தண்டின் நடுப்பகுதியிலும் இந்த பூஞ்சனம் போன்ற பொருளை காணமுடியாது குறிப்பிட்ட சில மரங்களிளேயே இந்த பூஞ்சனம் போன்ற பொருளைக் காணமுடிகிறது.வல்லப்பட்டையிலிருந்து பெறப்படும் இந்த பொருளால் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்துக்கு உலக சந்தையில் கேள்வி அதிகரித்ததைத் தொடர்ந்து வாசனைத் திரவிய தயாரிப்பாளர்கள் இலங்கையில் இத்தாவரம் உள்ளது என்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தே தற்போது இதனை சட்டவிரேதமாக வெட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடியுமாக உள்ளது.
இலங்கையில் வல்லப்பட்டை தாவரத்தை தென்பகுதியில் அதிகமாக காணக் கூடியுதாக உள்ளது சிங்கராஜவனம் மற்றும் மலையகப் பகுதிகளிலும் காணக்கூடியதாக உள்ளது.இதன் பெறுமதி அதன் கேள்விக்கும் தேவைக்கும் அமைய மாறுபடுகின்றது, ஒருவருக்கு வல்லப்பட்டை மரத்தில் காணப்படும் இந்த பூஞ்சனம் போன்ற பொருளின் அதிமுக்கியமான தேவையென இருக்கும் போது ஒருவர் அதனை எத்தனை கோடி ரூபா வேண்டும் என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருப்பார். இவ்வாறுதான் அதன் பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது.
இன்று நாட்டில் காணப்படுகின்ற வல்லப்பட்டை என்ற தாவரம் ஒரு பொருளாதாரப்பயிராக மாறியுள்ள நிலையில் இதனை வீணாக அழிப்பது கவலைக்குரிய விடயமாகும் அனைத்து மரங்களிலும் வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருள் காணப்படுவதுமில்லை எனவே இந்த மரங்கள் வீணாக அழிக்கப்படுகின்றன.இந்த மரங்களோடு சேர்த்து நாட்டில் உள்ள காட்டுவளங்களுமே அழிக்கப்படுகின்றன என்பது எதிர்கால சந்தியினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
சட்டவிரோதமாக வல்லப்பட்டை மரங்களை அழிப்பதை விட இதனை நாம் ஒரு பொருளாதாரத் தாவரமாக மாற்றி இன்று நாம் நாட்டில் பொருளாதாரப்பயிர்களாக பயன்படுத்துகின்ற தாவரங்களைப்போல் இதனையும் பயிர் செய்யலாம், நாட்டில் ஒரு புதிய தொழிலாக வல்லப்பட்டை செய்கையை ஊக்குவிக்க முடியும்.
இதனை அழித்து நாசப்படுத்துவதை விட சமூகத்துக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கு வகிக்கும் வகையில் இந்த தாவரத்தை மற்றியமைக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு மேல்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்திய அதிகாரி எம். கே. நிமல்கருணாசிரி மக்களை வேண்டிக் கொண்டார்.

0 Comments