ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை
மாவட்டத்தில் 9 ஆசனங்களையும் மொனராகலை மாவட்டத்தில் 8 ஆசனங்களையும் இரண்டு
போனஸ் ஆசனங்களையும் வென்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தம் 19
ஆசனங்களை வென்று ஊவா மாகாணத்தில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது. கடந்த
2009ம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்திற்கு
இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்தமுறை 25 ஆசனங்களைப் பெற்று ஆட்சி
அமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இம்முறை 19 ஆசனங்களை மட்டுமே
வென்று 6 ஆசனங்களை இழந்த நிலையில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது.
பதுளையில் 8 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு
ஆசனத்தையும் வென்றதன் மூலம் ஊவாவில் ஆளும் - எதிர் கட்சிகள் சமநிலை என்ற
நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் வாக்குகள் அடிப்படையில் நோக்கினால்
ஆளும் தரப்பைவிட ஐதேக-ஜேவிபி இணைந்த எதிர்தரப்பு 9777 வாக்குகளைப் பெற்று
பதுளையை வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம்.
கடந்தமுறை தேர்தலில் 129,144
வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை மாத்திரம் வென்ற ஐக்கிய தேசியக் கட்சி
இம்முறை 274,773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய
தேசியக் கட்சிக்கு இம்முறை 6 ஆசனங்கள் அதிகம் கிடைத்துள்ளன.
கடந்த 2009 தேர்தலில் 14,639
வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்ற மக்கள் விடுதலை முன்னணி இம்முறை
36,580 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது. இந்த தேர்தல்
முடிவுகள் மூலம் வாக்காளர்களாகிய ஊவா மக்கள் நாட்டுக்குச் சொல்லும் செய்தி
என்ன...?
0 Comments