Subscribe Us

அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்த ஜெயலலிதா



சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஜெயில் ஏற்கனவே மிக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்ட ஜெயிலாகும். தற்போது ஜெயலலிதா அங்கு அடைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறை எண் 23–ல் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, நேற்றிரவு நீண்ட நேரம் தூங்கவில்லை. 

தனிமையில் சிந்தனை செய்தபடி இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கழித்து தூங்கச் சென்றாலும் இன்று அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் அவர் கண் விழித்தார். சிறை அறைக்குள்ளேயே அவர் சற்று நேரம் நடந்ததாக ஜெயில் அதிகாரி ஒருவர் கூறினார். காலை 6 மணிக்கு பிறகு அவர் சுறுசுறுப்புடன் காணப்பட்டார். அவருக்கு படிக்க 2 தமிழ்நாளிதழ்களும் 3 ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்பட்டன. 

அந்த நாளிதழ்களை அவர் நீண்ட நேரம் படித்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு அவரை 4 மந்திரிகளும், அரசு அதிகாரிகளும் வந்து சந்தித்தனர். சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்தித்துப் பேச அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து பேச அனுமதிக்கக் கோரி பரப்பன அக்ரஹார மத்திய சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். 

ஆனால் இந்த விஷயத்தில் எல்லாரது மனுவும் ஏற்கப்படவில்லை. ஜெயலலிதா சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அவரை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
நன்றி; மாலைமலர்

Post a Comment

0 Comments