(எம்.எஸ்.முஸப்பிர்)
வென்னப்புவ, அலுத்பார வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில்
மறைத்துவைக்கப்பட்டிருந்த ஜப்பான் நாட்டுத் தயாரிப்பிலான 12 மோட்டார்
சைக்கிள்களை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்று
திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர்
மேற்கொண்ட நடவடிக்கையின்போதே மேற்படி ஜப்பான் நாட்டுத் தயாரிப்பிலான
மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மோட்டார் சைக்கிள்கள் இந்நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில்
கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள்
ஒவ்வொன்றையும் சுமார் நான்கரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு
திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக
வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
கூறினர்.


0 Comments