மதாயின்
நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.
அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள்
இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க
ஆரம்பித்துவிட்டது.
“பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது
என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன்.
உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்” ம்ஹூம்,
போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த
வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.
“மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்”
உடனே எடுத்து வந்தார்கள்
சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில்
மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின்
நகரை விட்டே துரத்துங்கள்”
விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு
அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. “இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே”
என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய்
ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத்
தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு
அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன
ஆயிற்று?”
“மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின்
மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம்
ஒப்படைத்துவிட்டான்” என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.
யஸ்தஜிர்த் மண் மூட்டையை ஏற்றி
வைத்ததோ அவமானப்படுத்த. அதைச் சுமந்து வந்ததில் எவ்வளவு அவமானம் ஆத்திரம்
ஏற்பட்டிருக்க வேண்டும்?. ஆனால், அவன் தனது நிலத்து மண்ணை அள்ளித் தானாகத்
தந்து, தங்களது வெற்றிக்கு வித்திட்டுவிட்டான் என்று பெருமிதமடைந்தார்கள்
தோழர்கள்! அல்லாஹ்வின் பாதையில் களமிறங்கியதும் என்ன பிரச்சினையானாலும்
சரி, சிக்கலானாலும் சரி அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே
இருக்கவில்லை! அனைத்தையும் ஆக்கபூர்வமாகவே பார்க்கும் பரந்த நோக்கு
இருந்திருக்கிறது அவர்களுக்கு. ரலியல்லாஹு அன்ஹும்.
oOo
மக்காவிலிருந்து
மதீனா செல்லும் பாதையில் ஓர் ஊர் இருந்தது. அங்கு முஸைனா எனும்
கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின்
மக்காவிலிருந்து மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனா வந்தடைய
ஆரம்பித்தனர். அவர்களெல்லாம் முஸைனாவைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
வழக்கத்திற்கு மாறான, அதிகமான போக்குவரத்து; மதீனாவில் நிகழ்ந்துவரும்
மாற்றம்; இவையெல்லாம் முஸைனா குலத்து மக்கள் மத்தியல் செய்தியாக
ஆரம்பித்தன. “என்னதான் நடக்கிறது அங்கே?” என்று ஆவலும் ஆர்வமுமாய்
விசாரிக்க, பதிலாய்க் கிடைத்த தகவல்களெல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமளித்தன!
“அப்படியா? உண்மையாகவா? இப்படியெல்லாம்கூட வாழலாமா? சிறப்பாக இருக்கே!”
கோத்திரங்களுக்கெல்லாம் சில
தலைவர்கள், பெருந்தலைவர் என்று உண்டு. முஸைனா கோத்திரத்திற்கும் ஒருவர்
இருந்தார்; அந்நுஃமான் இப்னுல்-முகர்ரின். அவருக்கு ஒன்பது சகோதரர்கள்.
சனான், ஸுவைத், அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அகீல், மஅகல், நயீம்,
மார்தி, தர்ரார்.
ஒருநாள் மாலை சகோதரர்கள்,
நண்பர்கள், பெரியவர்கள் என்று கூட்டமாய் அமர்ந்து
பேசி்க்கொண்டிருந்தார்கள். நுஃமான் மனதில் சிலநாளாய் ஓர் எண்ணம்
ஓடிக்கொண்டிருந்ததது. அன்று வாய்ப்பு அமைந்துவிட, பேசினார்:
“என் மக்களே! அல்லாஹ்வின் மீது
ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மது என்றொருவர் இங்கு யத்ரிபிற்கு
வந்திருக்கிறாரே, அவர் மக்களுக்குக் கருணை கற்றுத் தருகிறாராம்; நீதியும்
நேர்மையும் போதிக்கிறாராம். இன்னும் அவரைப் பற்றிக் கேள்விப்படுவதெல்லாம்
நல்லவையாகவே இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மக்களெல்லாம்
முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறார்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்வதை நாம் ஏன்
தாமதப்படுத்த வேண்டும்? என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் முடிவு
செய்துவிட்டேன். நாளைக் காலை முதல் வேலையாக நான் யத்ரிப் சென்று அவரைச்
சந்திக்கப் போகிறேன். என்னுடன் வர விருப்பமுள்ளவர்களெல்லாம் பயணத்திற்குத்
தயார் செய்து கொள்ளுங்கள்”
அச்சொற்கள் விழுந்த செவிகள்
அறிவுக் கூர்மையுள்ள செவிகள். மறுநாள் பொழுதுவிடிந்தது. நுஃமான் வெளியே
வந்து பார்த்தால் அவரின் அனைத்து சகோதரர்களும் நானூறு போர்வீரர்களும் என்று
ஒரு படையே பயணத்திற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.
புருவம் உயர்த்தி யோசித்தார்
நுஃமான். ‘இத்தனைபேர் செல்கிறோம்; இறைத்தூதர் ஒருவரைச் சந்திக்கச்
செல்கிறோம்; வெறுங்கையுடன் எப்படிச் செல்வது? ஏதாவது அன்பளிப்பு அளிக்க
வேண்டுமே..’ சோதனையாய் அந்த ஆண்டில் மழையின்றி, விளைச்சல் இன்றி, வறுமையில்
இருந்தார்கள் அவர்கள். கால்நடைகளும் ஏதும் அதிகமில்லை. பஞ்சத்திலிருந்து
காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சில அவரது வீட்டிலும் அவரின்
சகோதரர்கள் வீட்டிலும் இருந்தன. அவற்றையெல்லாம் தேற்றி ஓட்டிக்கொண்டு,
கிளம்பியது அந்தப் படை – மதீனாவை நோக்கி.
“வருகிறது ஒருபடை, தங்களை ஆரத்
தழுவிக்கொள்ள” என்ற நற்செய்தி நபியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பெருமகிழ்வுடன் அவர்களை வரவேற்க நபியவர்கள் தயாரானார்கள்.
நானூற்று சொச்சம் பேரும் வாகனப்
பிராணிகளும் ஆடுகளும் என்று பாலை வெயிலில் நடந்து வந்தால் எப்படி
இருக்கும்? காற்றில் மணல் புழுதி பறக்க, நிலம் திடும் திடுமென அதிர
மதீனாவில் நுழைந்தார்கள் நுஃமானும் சகோதரர்களும் முஸைனி குலத்துப் போர்
வீரர்களும். மதீனாவே மகிழ்ச்சியில் அதிர்ந்தது! எத்தனையோ
கோத்திரத்திலிருந்து வருகிறார்கள்; தனித்தனியாக வருகிறார்கள், சிறு
குழுவாய் வருகிறார்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம்
அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்க, தம் சகோதரர்கள் அனைவரும் தம் குலத்தின்
நானூறு போர் வீரர்களும் திருமண நிகழ்ச்சிபோல் ஒரு கோத்திரமே வந்து இணைவதைக்
காண்பது மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்குப் புதுசு. வரலாற்றில்
தனித்தன்மையை பெற்றுவிட்ட ஒரு பெருநிகழ்வு அது.
அவர்கள் அளித்த பரிசை நபியவர்கள்
மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனிலுள்ள சூரா தவ்பாவின் 99ஆவது வசனம்
இந்நிகழ்வை இப்படிக் குறிக்கிறது -
“கிராமப்புறத்தவர்களில்
அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்;
தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின்
நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்)
பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்)
அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன்
பேரருளில் புகுத்துவான் – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங்
கிருபையாளனாகவும் இருக்கின்றான்”
நுஃமான் ஒரு கோத்திரத்தின்
தலைவர். மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஆள் பலம், படை
பலம் உள்ளவர். வீர தீர சகோதரர்களே பத்துப் பேர். இவர்கள் அனைவரும்
மெனக்கெட்டு ஊரிலிருந்து பயணம் கிளம்பிச் செல்கிறார்கள். பணம் கொடு, பதவி
கொடு, மந்திரி சபையில் இடம் கொடு, இட ஒதுக்கீடு கொடு என்றெல்லாம்
பேசவில்லை! உலக ஆதாயங்களைப் பற்றி மூச்சே இல்லை.
‘ஒரே இறைவன் என்கிறீர்கள். நன்றாக
அறிவுக்குப் புரிகிறது. நல்லறம் போதிக்கிறீர்கள்; தீய செயல்களைச் செய்யக்
கூடாதெனச் சொல்கிறீர்கள். மனதில் ஆனந்தம் பொங்குகிறது. நாங்கள் பத்துப்
பேர் மட்டுமே சகோதரர்கள் இல்லை; இஸ்லாத்தினுள் காலடி எடுத்துவைத்த
எல்லோருமே சகோதரர்கள் என்கிறீர்கள். அதன் உன்னதம் சிலிர்க்கிறது. இங்கு
வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தென்படுகிறது. நிரந்தரம் என்பது
மறுமைக்குள் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. போதும்! இது போதும்
எங்களுக்கு!’ என்று தலைமைப் பகட்டு, இறுமாப்பு அனைத்தையும் கழட்டி
வைத்துவிட்டு அடக்கமாய் இஸ்லாத்திற்குள் நுழைந்தார் அந் நுஃமான் இப்னு
அல்-முகர்ரின், ரலியல்லாஹு அன்ஹு.
அதன்பிறகு -
அகழி யுத்தம், இதர யுத்தங்கள்
என்று இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களிலெல்லாம் நபியவர்களுடன் இணைந்து
களத்தில் ஒரே வீரவிளையாட்டுதான். போரில் நபியவர்களின் கொடியை ஏந்திச்
செல்லும் பொறுப்பும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. மக்கா
படையெடுப்பின்போது பெரும் படை சென்றது; அதில் பத்தாயிரம் வீரர்கள்வரை
இருந்தனர் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமல்லவா? அதில் நுஃமானின்
முஸனி கோத்திரத்தின் வீரர்கள் மட்டுமே ஆயிரத்து முந்நூறு பேர்.
முஹம்மது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு
ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியப்
பிரச்சினைகள் அவரை நெருக்கின. முதலாவதாக உஸாமா பின் ஸைதையும் அவர்
தலைமையில் படையையும் ரோமர்களை நோக்கி அனுப்பி வைப்பது. இரண்டாவது, “நானும்
நபி, நானும் இறைத் தூதுவன்” என்று கிளம்பினார்களே கிறுக்கர்கள், அவர்களிடம்
போர் தொடுப்பது. மூன்றாவது இஸ்லாத்திலிருந்து தடம் புரண்டு போனதுமில்லாமல்
தூற்றத் தொடங்கியவர்களை நேர்படுத்துவது.
ஒரு பாராவில் எழுதிவி்ட்டாலும்
இவை மூன்றுமே நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பெரும் சோதனைகள். அவை
அனைத்தையுமே தமது இரண்டரை ஆண்டுகால ஆட்சியிலேயே அபூபக்ரு எதிர்கொண்டு
சாதித்துக் காட்டியது இன்ஷா அல்லாஹ் நாம் படித்தறிய வேண்டிய தனி வரலாறு.
முன்னர் நாம் பார்த்த சில
தோழர்களின் வரலாற்றில் பொய்யன் முஸைலமா பிரதானமாய் தென்பட்டிருப்பான்.
இங்கு நேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா
போர்க் காட்சிகள் சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.
நபியவர்கள் மரணிக்குமுன் புதிதாய்
இஸ்லாத்தில் நுழைந்த கோத்திரத்தினர் சிலர் இருந்தனர். அவர்கள் மத்தியில்
ஓரிறைக் கொள்கை முற்றிலும் வேரூன்றாமல் இருந்தது. பண்டைய பழக்க
வழக்கங்களில் ஊறித் திளைத்திருந்த அவர்கள் மனதிலிருந்து அப்பழக்கம்
முழுவதுமாய் விடுபடவில்லை. நபியவர்களின் மரணச் செய்தி கிடைத்ததும், ‘சரி
தான்! புதிதாய் முஹம்மத் தோற்றுவித்த கலாச்சாரம் அது. ஆட்டம் முடிந்தது’
என்று அவர்களது மனதில் குலப் பெருமை, அதிகார வேட்கை, பண ஆசை ஆகியனவெல்லாம்
திரும்பவும் குடியேற ஆரம்பித்தன.
“ஸகாத்தா? என் பணம்; என் காசு;
என் சொத்து. அதெல்லாம் தரமாட்டேன். போனால் போகிறது, தொழுது கொள்கிறேன்;
நோன்பு நோற்கிறேன்” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
‘மதீனாவிலிருந்து முஸ்லிம்
வீரர்களின் பெரும் படை உஸாமாவின் தலைமையில் ரோமர்களை நோக்கிச்
சென்றுவிட்டது; கலீஃபாவும் முஸ்லிம்களும் முஹம்மதை இழந்த சோகத்தில் மனமும்
உடலும் நொடித்துப் போய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார்கள்.
முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டனர். அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட
முடியாது’ என்ற இறுமாப்பும், இஸ்லாத்திலிருந்து விலகிப்போன முர்த்தத்களிடம்
குடிகொள்ளலாயிற்று.
இஸ்லாமிய வரலாற்றில் கடுங்கொந்தளிப்பான காலகட்டம் அது.
முஸ்லிம்களுக்கு எதிராக பனூ
கதஃபான், பனூ அஸத், பனூ தாய் ஆகியோர் போர்களத்திற்கு வந்துவிட்டார்கள். பனூ
தால்பா பின் ஸஅத், பனூ மர்ரா, பனூ அபாஸ் எனும் கோத்திரத்தினர் தங்களது
படையுடன் மதீனா நகருக்கு அருகே அமைந்துள்ள அப்ராக் எனும் திறந்தவெளிக்கு
வந்துவிட்டனர். பெருங் கூட்டமாய்க் கூடி நெருக்குதல் அளித்தால் கலீஃபா
அபூபக்ரு இணங்கிவிடுவார் என்ற திட்டம் இருந்தது அவர்களுக்கு. அப்படி
இல்லையா மதீனாவைத் தாக்கிக் கைப்பற்றுவோம்! கிள்ளுக்கீரை என்று
நினைத்துவிட்டனர் ஸித்தீக்குல் அக்பரை.
அந்தக் கோத்திரங்களின் குழுவொன்று
அபூபக்ருவைச் சந்தித்து, “ஸகாத்தெல்லாம் முஹம்மது நபி இருக்கும்போது
கேட்டார்கள்; தந்தோம். அவர் சென்றுவிட்டார். அதனால் அதை நாங்கள்
உங்களுக்குத் தரத் தேவையில்லை. எங்களை ஸகாத் கடமையிலிருந்து
விடுவித்துவிடுங்கள். இல்லையா எங்களுக்கு இஸ்லாமெல்லாம் தேவையில்லை.
நாங்கள் வெளியேறுகிறோம்”
உமர் (ரலி) உட்பட மூத்தத்
தோழர்கள் மத்தியில் இந்த முர்தத்களை எதிர்த்துப் போர்தொடுப்பதில் தயக்கம்
இருந்தது. பயமல்ல; அரசியல் தயக்கம்.
“ஸகாத் மட்டும்தானே தரமாட்டேன்
என்கிறார்கள். ஆனால் தொழுது கொள்கிறேன், இதர கடமைகள் செய்கிறேன்
என்கிறார்கள்; எனில் அவர்களும் முஸ்லிம்களாகத்தானே கருதப்பட வேண்டும்.
கலிமாச் சொல்லியிருக்கும் இவர்களிடம் எப்படிப் போரிடுவது?”
அதற்கு அபூபக்ரு (ரலி) உரைத்த
பதில் சுருக்கமானது. வலிமை வாய்ந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாகக்
கூறுகிறேன். தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பவன் யாராக
இருந்தாலும் நிச்சயம் அவனை எதிர்த்து நான் போரிடுவேன. ஸகாத் அவர்களது
சொத்தின் மீதான உரிமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம்
சிறியதொரு பெண் ஆட்டை ஸகாத்தாக கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது
எனக்குத் தரமறுத்தால் போர்தான். அவ்வளவு ஏன், மூக்கணாங்கயிறு ஒன்றை ஸகாத்
கடமையாய் அவர்கள் நபியவர்களிடம் அளித்திருந்து அதை இப்பொழுது தர
மறுத்தாலும் சரியே”
நமக்கு இதில் பாடம் இருக்கிறது.
‘எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருப்பது, கொஞ்சம்
தொழுதுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நேற்றுதான் இரண்டு ஏழைக்கு
மீந்துபோன சோற்றைப் போட்டேன்; இன்று ஸகாத்தும் கொடுக்கணுமா?’ என்று
சொல்வதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் என்ன பொழுது போக்கா? அவை
மார்க்கத்தின் அடித்தளமல்லவா!
அபூபக்ருவின் அந்த பதில், வந்த
குழுவினரைப் பேச்சடைத்துப் போகச் செய்தது. அதேநேரத்தில் அபூபக்ருவின்
திட்டவட்டமான இந்த பதில் உமர், இதரத் தோழர்களின் உள்ளங்களைத் திறக்க,
பளீரென உண்மை அவர்களுக்குப் புரிந்தது.
தம் பதிலால் வந்தவர்கள முகத்தில்
தெரிந்த மாறுதலைத் தெளிவாகப் படித்துவிட்டார் அபூபக்ரு. அவர்கள் போருக்குத்
தயாராகி மதீனாவைத் தாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது நிச்சயமாகத்
தெரிந்தது.
திரும்பிய குழு, தங்கள்
தலைவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தது. அந்த அனைத்துக் கோத்திரத்தின்
தலைவர்களும் பரபரவென்று ஆலோசனை செய்தார்கள். ‘முஸ்லிம்களின் பெரும்
படையொன்று மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டதால் போதிய படை பலம்
இன்றி முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். நம் தாக்குதலை
எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவர்களிடம் இப்போது வலுவில்லை. இதுதான் சரியான
தருணம். மதீனா நம் கையில் வந்துவிட்டால் அதன் நிர்வாகம் நமதே’ அந்த ஒவ்வொரு
கோத்திரமும் வெற்றியில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கனவு
கண்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, “நாங்கள் தயார்” என்று ஏகமனதாய்
அறிவித்துவிட்டன.
இங்கு மதீனாவில் தற்காப்பு
ஏற்பாடுகள், போர் ஏற்பாடுகள் என உடனே மளமளவென்று காரியத்தில் இறங்கினார்
கலீஃபா அபூபக்ரு. முதற்காரியமாகப் பெண்களையும் குழந்தைகளையும்
கோட்டைகளுக்குள்ளும் மலைகளுக்கும் அனுப்பி வைத்தார். மதீனா நகருக்கு வெளியே
காவல்படை அமைக்கப்பட்டது. பிறகு, இஸ்லாத்தில் திடமாய் நிலைத்திருந்த இதர
கோத்திரத்தினருக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. வழி தவறிப்போனவை
சிலகோத்திரங்கள்தாமே. இஸ்லாம் ஆழ வேரூன்றிக் கிடந்த அஸ்லம், கிஃபார்,
அஷ்ஜா, ஜுஹைனா, கஅப் மற்றும நுஃமானின் முஸைனா கோத்திரங்களுக்குத் தகவல்
வந்து சேர்ந்ததுமே, குதிரைகள், ஒட்டகங்கள், போர்த் தளவாடங்கள் என்று
மதீனாவின் வீதிகள் அக்கோத்திரங்களின் முஸ்லிம் வீரர்களால் நிறைந்தன.
அபூபக்ருவின் யூகம் தவறாகவில்லை.
எதிரிகள் வந்து பேசிச் சென்று மூன்று நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. அஸத்,
கத்ஃபான், அப்ஸ், திப்யான், பக்ரு கோத்திரங்கள் படை திரண்டனர். தீஹுஸ்ஸா
என்ற பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டு குறிப்பி்ட்ட அளவிலான படை வீரர்கள்
முதலில் மதீனாவை நோக்கிக் கிளம்பினர்.
நகருக்கு வெளியே இருந்த காவல்
படைவீரர்கள் கிளம்பி வரும் ஆபத்தை உடனே கலீஃபாவுக்குத் தெரிவிக்க, “அங்கேயே
இருங்கள். இதோ வந்துவிட்டேன்” என்று கலீஃபா அபூபக்ரும் இன்னும் சில போர்
வீரர்களும் உடனே அங்கு விரைந்தனர்.
போன வேகத்தில் அப்படியே
முஸ்லிம்களைத் துவட்டி துவம்சம் செய்துவிட்டு மதிய உணவை மதீனாவில்
சாப்பிடலாம் என்று படு அலட்சியத்துடன் வந்த எதிரிகள் மதீனா நகருக்கு வெளியே
அத்தகைய பாதுகாப்பையும் முஸ்லிம் போர்வீரர்களையும் சற்றும்
எதிர்பார்க்கவில்லை. மதீனா நோக்கிச் செல்லும் சாலையெங்கும் திறமையான
முஸ்லிம் போர்வீரர்கள் காவல் நிற்க, துவங்கியது சண்டை! நிறைய நேரம்
எடுக்கவில்லை. சற்று நேரத்திலேயே எதிரிகளை விரட்ட ஆரம்பித்துவிட்டனர்
முஸ்லிம்கள். மிரண்டு திரும்பி ஓடஆரம்பித்தனர் எதிரிகள். விடாமல் அவர்களை
விரட்டிக் கொண்டு சென்றது முஸ்லிம் படை. வெற்றிச் செய்தியை எதிர்நோக்கி
முகாமிட்டுக் காத்திருந்த எதிரிப் படையின் இதர போர்வீரர்கள், மூச்சிரைக்க
தங்களது படை ஓடிவருவதையும் அவர்களை முஸ்லிம் படையினர் ஆவேசமாய்த் துரத்திக்
கொண்டு வருவதையும் பார்த்துத் திடுக்கி்ட்டு எழுந்தனர். தங்களுக்கு பலத்த
உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.
உடனே ஒரு காரியம் செய்தார்கள்.
தங்களிடமிருந்த முரசுகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆவேசமாய்க் கொட்ட
ஆரம்பித்தார்கள். பயங்கரமான முரசு ஒலிகள். அத்திட்டம் சரியாக வேலை செய்தது.
முஸ்லிம்களின் ஒட்டகங்கள் அவ்வொலியில் மிரண்டு திக்குத் தெரியாமல் ஓடத்
துவங்கின. அவற்றையெல்லாம் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள்
முஸ்லி்ம் படைகளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாய் உயிரிழப்பு
எதுவும் இல்லாமல் மதீனா திரும்பியது முஸ்லிம்களின் படை.
இதனிடையே முஸ்லிம்களை எப்படியும்
வென்றுவிடுவோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த எதிரிகள் முன்னமேயே
தில்-கிஸ்ஸா பகுதியிலிருக்கும் தங்கள் நண்பர்களுக்குத் தகவல்
அனுப்பியிருந்தனர். “முஸ்லிம்கள் நோஞ்சான் நிலையில் இருக்கிறார்கள். வேறொரு
வழிபிடித்துக் கிளம்பி வாருங்கள். பிய்த்து எறிந்துவிடலாம்” அந்த
தில்-கிஸ்ஸா மக்களும் ஒரு படை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வர
ஆரம்பித்தனர். இந்தப் படை அணியும் மதீனாவை எளிதாய்க் கைப்பற்றி விடலாம்,
பெரிதாய் எதிர்ப்பெல்லாம் இருக்காது என்று ஏகப்பட்ட நம்பிக்கையுடனும்
அலட்சியத்துடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு விதி வேறுவிதமாய்
மதீனாவில் காத்திருந்தது.
‘தம்பி உடையான படைக்கு அஞ்சான்’
என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு தம்பிக்குப் பதிலாய் அண்ணன் தம்பிகள்
பத்துப்பேர் கிடைத்தால்? அபூபக்ரு ரலி படை திரட்டினார். வலப்பக்க அணிக்குத்
தலைமை நுஃமான் இப்னு முகர்ரின். இடப் பக்க அணிக்கு அவர் சகோதரர் அப்துல்லா
இப்னு முகர்ரின். காலாட் படைக்குத் தலைமை மற்றொரு சகோதரர் ஸுவைத் இப்னு
முகர்ரின். மதீனாவிலிருந்து கிளம்பியது இந்தப் படை. எதிரிகளை அவர்கள்
சற்றும் எதிர்பாராமல் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. எனவே முஸ்லிம்
படையினர் படு கவனமாய் எச்சரிக்கையுடன் சப்தமே எழுப்பாமல் மிக மிக அமைதியாய்
முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.
இருள் முற்றிலும் விலகாத விடியற்காலை நேரம்.
தங்களது அருகில் நெருங்கிவிட்ட
முஸ்லிம் படைகளின் குசுகுசுப்பான சப்தம்கூட கேட்காத நிலையில் இருந்த
எதிரிகளை பாய்ந்து தாக்கியது முஸ்லிம் படை. “என்ன, ஏது” என்று உணர்வதற்குள்
வாள்கள் சுழன்றன; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன. எதிரிகளின் உடல்களை
சரமாரியாகத் துளைக்க ஆரம்பித்தன.
பொழுது விடிந்து சூரியன்
எழுவதற்குள் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர்
களத்தை வி்ட்டு ஓட, மீதமிருந்தவர்களை முஸ்லிம் படையினர் துரத்த,
தில்-கிஸ்ஸாவரை எதிரிகளை ஓடஓட விரட்டினர் முஸ்லிம்கள். இறுதியில்
எதிரிகளின் கால்நடைகள் முஸ்லிம்கள் வசமாயின.
பின்னர், அந் நுஃமான் இப்னு
அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அப்பகுதியில் காவலுக்கு
நிறுத்திவிட்டு கலீஃபா அபூபக்ரு மற்ற வீரர்களுடன் மதீனா திரும்பினார்.
இந்நிலையில் அலீ (ரலி) முக்கியமான ஆலோசனையொன்றை அறிவித்தார். கலீஃபா
இத்தகைய அபாய நடவடிக்கைகளில் தாமே நேரடியாக ஈடுபடாமல் மற்ற தோழர்களைத்
தளபதியாக அனுப்ப வேண்டும் என்ற அவரது ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு
அதை அபூபக்ருவிடம் எடுத்துச் சொல்லித் தடுத்தனர்.
அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட
அபூபக்ரு, காலீத் பின் வலீத், இக்ரிமா பின் அபூஜஹ்ல் போன்ற திறமையான
பதினொரு தளபதிகள் தலைமையில் பல பகுதிகளுக்கும் படையனுப்பினார். அவர்களில்
ஒருவர் நுஃமானின் சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். அவரது தலைமையில் ஒரு
படைப்பிரிவு திஹாமா பகுதிக்குச் சென்று போரிட்டது. பின்னர் முர்தத்கள்
அனைவரின் மீதும் ஏககாலத்தில் முழுவீச்சில் போர் தொடுக்கப்பட்டு அவர்களது
பிரச்சினை ஒருவழியாய் முடித்து வைக்கப்பட்டது.
கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின்
ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் காதிஸிய்யாவில் நிகழ்வுற்ற யுத்தம் சில
பல அத்தியாயங்களுக்கு நீளும் தனி வரலாறு. சுவையான வீர வரலாறு.
அப்போரில் முஸ்லிம் படைகளுக்குத்
தலைவராக ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவை நியமித்தார் உமர்.
பிரம்மாண்டமான பாரசீகப் பேரரசின் வலிமையான படைகளை எதிர்கொள்ள முஸ்லிம்
படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸஅதுக்கு உமரிடமிருந்து
கடிதமொன்று வந்தது.
தொடரும்….
0 Comments