
சாப்பாட்டு மேசை என்னவோ புதுப்புது ஐட்டங்களோடு நிறப்பி வைத்திருந்தாலும், தண்ணீர் எடுத்து வைக்க மறந்து விட்டது. புது மாப்பிள்ளை இல்லையா? சாப்பிடும் போது வெட்கமாக இருக்குமென்று வீட்டார் யாரும் டைனிங் ரூமில் இல்லை. மனைவி ஸைனப்போடு உணவருந்தி முடியும் தருவாயில் தான் தண்ணீர் எடுத்து வைக்காததை உணர்ந்த ஸைனப் குசினிப் பக்கம் ஓடினாள்.
"என்ன மகள்?" உம்மா மகள் வரும் பரபரப்பைப் பார்த்து வினவ,
"தண்ணி எடுத்து வெக்க மறந்துட்டு உம்மா" என்றாள்.
"என்ன மகள் செய்த வேல நீங்க. மாப்புள கோவிப்பாரோ?" என்று ஏசியவாரே ஒரு குவளைக்குத் தண்ணீரை நிறப்பி ஸைனபிடம் அனுப்பி வைத்தாள் தாய்.
ஒரு வாரம் மாமியார் வீட்டில் தொடர்ந்து இருந்ததிலிருந்து ஒன்றை நன்றாக அவதானித்தான் ஹஸன். அவன் இரண்டு இளைய சகோதரிகளுக்கு நானாவாகப் பிறந்தவன். ஒரு டீ ஊற்றித் தர தங்கச்சிமாரிடம் கேட்டாலும் நொண்டிச் சாட்டுச் சொல்லிவிட்டு நகர்ந்து விடும் அவர்களிடம் ஒரு வேலை வாங்குவதென்பது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனால் திருமணம் முடித்த கையோடு மூன்றாவது நாள் மாமியார் வீட்டுக்கு வந்து விட்டார்கள். அவர்களது ஊர் வழக்கப்படி ஏழு நாட்கள் மாமியார் வீட்டில் இருக்க வேண்டுமாம்.
காலையில் டீ, அடுத்தது டிபன், மதிய உணவுக்கு இடைப்பட்ட வேளையில் ஒரு ஸ்னேக்ஸ், பகல் உணவு, திரும்ப மாலை ஒரு இஞ்ஷிப் ப்லேன்டியோடு சோட்டீஸ். இரவு உணவுக்கு மீண்டும் ஒரு மாவுச் சாப்பாடு வித் கோழி கரி ப்லஸ் ஆட்டு உள்சாமான். இரவு படுக்கைக்கு முன்னர் ஒரு கோப்பி. இரவில் இடையில் பசி வந்தால் எழும்பிக் கொறிக்க பிஸ்தா, கஜு, ஈச்சம்பழம்.
இடையிடையே "பசிக்குதா? ஏதும் கொண்டு வரவா?" எனக் கேட்கும் மனைவி. முதல் நாள் கேட்கும் உணவுகள் எல்லாமே மாமியார் வீட்டில் கிடைப்பதை உணர்ந்தான். "இஞ்ஜ, இது, ஏய்" என்று கூப்பிட்டால் மனைவி எந்த வேலையாக இருந்தாலும் வந்து அவன் முன்னால் நின்றாள். "அடடே.. பள்ளி ஹஸரத் சொன்னது சரியா இருக்கே" என்று தனக்கு அவர் கூறிய அறிவுறைகளை மீட்டிப் பார்த்துக் கொண்டான்.
அது சரியாக கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருக்கும். கூட்டாளிப் பொடியன்மாரெல்லாம் சொன்னதக் கேட்டுத்தான் ஹஸரத்துக்கிட்ட போய் எட்வைஸ் கேக்கனும்னு அவன் முடிவெடுத்தான்.
"டேய் ஹஸன். எங்களுக்கு செல்லத் தெரியாத பல விசயங்கள் ஈக்கிடா. கலியாண விசயங்கள், மத்த விசயங்கள் என்டு நெறைய இரிக்கி. அதுகள நாங்க செல்லுறத்த விட, பள்ளி ஹஸரத் விபரமா செல்லுவாரு. பெய்த்துக் கேளு" என்றார்கள் கூட்டாலிமார். போதாக்குறைக்கு அவன் நண்பரொருவன் ஹஸரத்துக்குக் கோல் செய்து "ஹஸரத், எங்கட பொடியன் ஒன்டு வாரான். கொஞ்சம் கலியாண விசயங்கள், மத்த விசயங்கள ஆளுக்குச் செல்லிக் குடுங்கே" என்று கோர்ட் வேர்டில் முன்கூட்டியே சொல்லியிருந்தான்.
பள்ளி ஹஸரத்துக்கிட்ட தயங்கிய படியே போனான். "வாங்க தொர, இஸ்லாத்துல ஏன் வயது வந்த இளைஞனுக்கு திருமணம் கடமையாக்கப் பட்டிருக்கு தெரியுமா?" என்று தொடங்கிய ஹஸரத் முதலில் மத்த விஷயங்களைப் பேசி முடித்து விட்டு, அந்த டொபிக்கிற்கு ஒரு என்டு கார்ட் போட்டார். "ஒரு கணவன், அவனது மனைவியை எந்த நேரத்தில அழைத்தாலும், அவள் எந்த சூழ்நிலைல இருந்தாலும் போகனும், அப்படி அவள் மறுத்தால், மலக்குமார் அவளுக்கு பதுவாச் செய்வாங்க" என்று சொல்லி முடிச்சார்.
"அப்ப கணவனுக்கு சேவை செய்யத்தான் மனைவி இருக்காளா?" சாராம்சத்தை ஒரு கேள்வியாகவே ஹஸன் கேட்க, "இல்லையா பின்ன. கணவனின் திருப்தி இல்லாமல் மரணிக்கும் பெண் நரகம் செல்லுவாள் என்று நபியவர்கள் கூறியிருக்கிறாங்க" என்று பதில் சொன்னார் ஹஸரத்.
அடடே, அப்படியென்றால் நாங்க சொல்லுறதத்தான் வைப் செய்யோனும் போல. இங்கயும் அதுதான் நடந்தது.
ஏழு நாள் சம்பிரதாயம் முடிய ஹஸன் அவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றான். போக முன்னாடியே ஸைனபின் தாயாரிடமிருந்து ஆலோசனைகள். "மாப்புளய எதிர்த்துப் பேசிடாத. ஊட்டுஔ செல்லப் புள்ளயா இருக்கிறது போல அங்க பெய்த்து இருக்கப் படாது. என்ன நடந்தாலும் பொம்புளகள் நாங்கதான் பொறுத்துப் போகனும்"
புது மைனி வந்ததும் ஏலவே தப்பிக்க வழி பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மைனி மாரும் குசினியிலிருந்து விடை பெற்றனர். காலை எழுந்தாள் மாமியாரோடு குசினியில் சங்கமித்திட வேண்டும். காலை உணவு எது சமைப்பது, பகலைக்கு எது, இரவைக்கு என்ன சாப்பாடு என முடிவெடுப்பது மாமியார்தான். 30 வருடங்களுக்கு மேலே இல்லத்து அரசி அவர்தானே. புதிதாக வந்தவளுக்கு இடம் கொடுத்து விடுவாரா?
ஆரம்பத்தில் கொஞ்சம் அரசல் புரசலாகத் தொடங்கிய உரசல்கள் பின்னாட்களில் பிரச்சினைகளாக வெடித்தது. "ஓன்ட பொம்புளய பபா (baba) மாதிரி எலயா வளத்து வெச்சீக்கிறாங்க. ஒன்டும் ஆக்கத் தெரியா. ஒரு தேங்கா திருகத் தெரியா. சோறு ஆக்கினால் உப்பில்ல" கம்ப்லைனுகள் அரச ஆபீஸ் மேசைகளில் அடுக்குன்டும் பைல்கள் போல நிறம்பி வழிந்தன.
ஆரம்பத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு பேசாமல் இருந்த சைனப் நாட்கள் செல்லச் செல்ல கணவனிடம் முறைப்படத் தொடங்கினாள். "ஒங்கட உம்மாக்கு நான் என்னத்த செஞ்சாலும் குத்தம்தான். கலியாணம் முடிக்க மொதலே செல்லித்தானே முடிச்ச எனக்கு ஆக்கத் தெரியா. படிக்கிற காலமெல்லாம் எங்கட உம்மா குசினிக்கும் எடுக்குறல்ல. அதால பழகல்ல என்டு. இதுக்குப் பொறகுதான் பழகனும் என்டு. கொஞ்சம் கொஞ்சமாத்தானே பழகிட்டு வாரேன். அதுக்குள்ள ஆயிரம் கொர சொல்லுறா?"
ஹஸன் நடுவில் மாட்டுப் பட்டுக் கொண்டு உம்மாவுக்கா, மனைவிக்கா சப்போட் பன்னுவதென்று நின்றிருக்க ஒருநாள் மாமிக்கும் மருமகளுக்கும் பிரச்சினை வலுத்தது. குசினிக்குள் வாய்த்தக்கம் சென்று கொண்டிருக்க போன வேகத்தில் ஸைனபுக்கு விட்டான் ஒரு அறை. "உம்மாவ எதிர்த்துப் பேசுரியா?" அடித்த வேகத்தில் கன்னம் சிவக்க அவள் அழுது கொண்டே ரூமுக்குள் சென்று விட்டாள்.
இதுவரை தனக்குக் கோபம் வந்து யார் மீது கையை ஓங்கினாலும் பதிலுக்கு அவர்களும் ஓங்குவார்கள். ஏன் அவளது தங்கைகளோடு கூட சண்டை பிடித்தாலும் சாரிமாரியாக அவர்களும் அடித்து விடுவார்கள். இவ்வாறு பழக்கப்பட்ட இவனுக்கு மனைவிக்குக் கை ஓங்கிய போது, பதிலுக்கு எதுவுமே வரவில்லை. "அடடே ஆம்பிளைன்னா இதுதான் கெத்து போல" என்று நினைத்தான் அவன். போதாக்குறைக்கு தாயின் எட்வைஸும் பக்கபலமாக இருந்தது. "ஓண்ட பொண்டாட்டிய அடக்கி வெச்சிக்கோ, இல்லன்டால் ஒன்ன அடக்க வருவா"
நாட்கள் சென்றன. மனைவிக்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுவதை ஊர் உலகில் அவன் அவதானித்தான்.
"பொண்டாட்டிட எட்வைஸக் கேட்டு பொழப்பு நடத்துறவனெல்லாம் ஆம்புளயா மச்சான். அவனுகள் பொம்புள தாஸனுகள்" நண்பர்களின் ஸைட் சப்போட் வேறு.
"வா என்டா வரோனும். போ என்டா போகோனும். நில்லு என்டா நிக்கோனும். பொண்டாட்டிய ஆரம்பத்துலயே அப்பிடி வெச்சிக்கோனும்" உற்றார் உறவினர்கள் அவ்வப்போது ஹாப்பொயிலுக்கு பெப்பர் தூவுவது போல ஐடியாக்களை இவன் மீது திணித்தனர்.
இனி என்ன, இவன் போடுவதுதான் சட்டம். வா என்றாள் வந்தாள். நில் என்றால் நின்றாள். இரவு மூன்று மணிக்கும் பசிக்கிறது என்றால் தூக்கத்திலிருந்து எழுந்து சென்று கணவனுக்கு ஏதும் தயாரித்துக் கொடுக்க வேண்டும். காலை கணவன் எழும்பும் போது மேசையில் டீ. பல்லு வெலக்கிட்டு வரும் போது சாப்பாடு மேசையில் இருக்கனும். வேலை விட்டு வரும் போது தனக்கு சேவகம் செய்யக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் குறைவிருந்தாலும் அடி விழும். இவன் வேலை செய்யும் ஆபீஸில் பெண்களோடு கொஞ்சிக் குலாவுவான். ஆனால் மனைவி அவளது உறவுக்காரரோடு பேசினாலும் ஏச்சு விழும். தீர்மானங்கள் எடுக்கும் போது மனைவியின் பேச்சைக் கேட்கவே மாட்டான். வேலை வேலை என்று எப்போதும் பணத்தின் பின்னாலேயே ஓடினான். மனைவி என்பது ஒரு செல்லாக் காசாகவே போனது அவனுக்கு. காலம் செல்லச் செல்ல கண்டதுக்கெல்லாம் கையோங்கத் தொடங்கினான்.
அவள் எதிர்த்துப் பேச வாயெடுத்தால் "இந்தா, இந்தப் புத்தகத்தைப் படி என்று கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகள் என்ற புத்தகத்தை நீட்டுவான். பயான்களை போட்டுக் காட்டுவான். மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இவ்வாறு எதிர்த்துப் பேச முடியாது என்பான்.
வீட்டில் தினம் சண்டை. கோபம் வரும்போதெல்லாம் " கணவன் திருப்தியில்லாமல் மனைவி சுவர்க்கம் நுழைய முடியாது" என்று ஹஸன் கத்துவான். என்ன செய்ய, அவனது அடிகளை வாங்கிக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.
காலங்கள் உருண்டோடின. ஒடுக்குமுறைகள் ஒருநாள் தலாக்கில் சென்று முடிந்தது.
"ஒரு தலாக் நடந்தா ஆண்புளக்கி அடுத்த கலியாணம் நடக்குற லேஸி, ஆனால் பொம்புளக்கி கஷ்டம். கலியாண வாழ்க்கை என்றால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னித்தான் போகனும்" ஆலோசனைகள் ஆங்காங்கே ஸைனபுக்கு வர ஆரம்பித்தது.
கடைசியில் காதிக் கோட்டில் வழக்குப் போய் நின்றது. "அவளுக்கு தலாக் வேண்டுமாம்" காத்தோடு காத்தாக ஊரிலும் செய்தி பரவியது. "வேற யாரோட சரி பழகிட்டாளாய்க்கும். அதுதான் புடிச்ச புடில டிவோஸ் கேக்குறாள். இப்ப உள்ள பொம்புளப் புள்ளைகளத் தெரியாதா?" பெரிசுகள் ஊர் முழுக்க கதை பரப்பித் திரிந்தனர்.
கணவன், மனைவியின் பிரச்சினையைக் கேட்ட காதி நீதிபதி, கடைசியாக ஒரு கவுன்ஸலரிடம் போய் வாருங்களேன். பின்னர் டிவோஸ் தருகிறேன் என்று சொல்லி விட்டார்.
குறிக்கப்பட்ட நாளில் கவுன்ஸளரிடம் போய் நின்றார்கள் இருவரும். என்டராகும் போதே கவுன்ஸிலிங் ரூமில் ஒரு பெயர்ப்பலகை தொங்கியது. அடடே கவுன்ஸிலிங் பன்னுறவரும் மவ்லவியா, தனது மனைவியின் குறைகளை மார்க்க விடயங்களோடு ஒப்பிட்டு அவருடன் பேசி விடலாம் என்ற தைரியத்தோடு நுழைந்தான் ஹஸன்.
முதலில் மனைவிக்குப் பேச அவகாசம் வழங்கப் பட்டது.
"உங்களுக்குள்ள என்னம்மா பிரச்சினை. எதுக்காக நீங்க டிவோஸ் கேட்குறீங்க?" கவுன்ஸளர் வினவினார்.
ஸைனப் எதுவும் பேசவில்லை.
"நீங்க ஏதாச்சும் பேசினால்தான் எனக்கு எதுவும் சொல்லலாம்" கவுஸ்சலரிடமிருந்து கூறினார்.
"இவரு கண்டதுக்கெல்லாம் கை ஓங்குறார் சேர்" நீண்ட மௌனத்தின் பின்னர் விம்மிய குரல்களில் பதில் வந்தது.
"ஏன்? என்ன பிழை செஞ்சீங்க?"
"சோத்துல உப்பில்லன்டா அடி விழும், நான் ஏதும் கேட்டாலும் வாங்கித் தர மாட்டாரு. போன நோம்புப் பெருநாளைக்கு உடுப்பெடுத்துத் தந்தது. இந்தப் பெருநாள் வரைக்கும் வாங்கித் தரல்ல. வசதி இல்லன்டாலும் பரவாயில்ல சேர். ஆனால் காசு இருக்கு. ஊட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்க மாட்டார். ஆனால் சாப்பாடு ருசியில்லன்டு சண்ட போடுவார். என்ன உம்மா ஊட்டுக்கு வருஷத்துக்கு ரெண்டு பெருநாளக்கித்தான் கூட்டிப் போவார். எங்கட வாப்பா சொகமில்லாம மாசக் கணக்கு இருந்தாரு. இன்டக்கி கூட்டிப் போற, நாளக்கி கூட்டிப் போற என்டு வாப்பாட மௌத்துக்குத்தான் கூட்டிப் போனார். எல்லா விசயங்கள்லயும் அவரா முடிவெடுப்பார். நான் என்ன சென்னாலும் கேட்க மாட்டாரு சேர். சரி பரவாயில்ல என்டு பொறுமையாவே இருந்துட்டேன். அடிக்கடி கணவன் திருப்தி இல்லாம மனைவி சொர்க்கம் போக மாட்டார் என்டு மெரட்டுவாரு சேர்.
இஸ்லாத்துல மனைவி கேக்குற மஹர் தொகைய குடுக்கணும் என்டு சொல்லியிருக்கு தானே. ஆனால் இவரு கலியாணம் முடிக்க கொள்ள ஒரு வார்த்தை கேட்கல சேர். ஆயிரத்தி ஒரு ரூபா தான் மஹராகத் தந்தார் சேர். ஆனால் சீதனம் என்டு எங்கட வாப்பா கிட்ட ஒரு கார் வாங்கிக் கேட்டாரு. எங்கட வாப்பா மூனு பொம்புளப் புள்ளைகளப் பெத்துட்டு எனக்கு மட்டும் எப்பிடி வாங்கித் தருவாரு. அவரால ஒரு மோட்டர் பைக்தான் வாங்கிக் குடுக்க முடிஞ்சிச்சி. அத சொல்லியே ஏசுவாரு எனக்கு. வெளிய ஒரு பயணம் கூட்டிப் போக மாட்டாரு சேர். ஆனால் அவரு மட்டும் கூட்டாலிமாரோட வெளிய பெய்த்து வருவாரு. ஒரு ஆசைப்பட்டத கேட்டா வாங்கித் தர மாட்டாரு
கண்டதுக்கெல்லாம் கை ஓங்குவாரு. எங்கட உம்மாவும் ஆம்புளன்டால் அப்பிடித்தான் இருப்பாங்க. பொறுத்துப் போகனுமென்டு கலியாணத்துக்கு மொதல்ல சொன்னா. ஆனால் இவருட கொடுமைகள் அதிகமா இருக்குது. இஸ்லாம் ஆண்களுக்கு மட்டுமா சேர் இப்பிடி சலுகை குடுத்து இருக்குது? பெண்களுக்கு இல்லையா?" என்று அழுதவாறே கூறி முடித்தாள்.
கணவர் பக்கம் திரும்பிய கவுன்ஸளர், "உங்க பிரச்சினையச் சொல்லுங்க" என்றார்.
"நீங்க ஒரு மவ்லவியும் தானே சேர். நீங்களே சொல்லுங்க. கணவனுடைய திருப்தியில் தானே மனைவி சுவர்க்கம் போக ஏலும். இஸ்லாத்துல மனைவி கணவனுக்குக் கட்டுப்படத்தானே சொல்லியிருக்கு. ஆனால் ஊட்டுல எடுக்குற எந்தவொறு டிஷிஷன்லயும் இவ வந்து தலையப் போடுவா சேர். புது ஊடு கட்டக்கொள்ள ஊட்டு முன்னுக்கே ஜன்னல் போடத் தேவல்ல என்டு முடிவெடுத்தா, இவ போடோனும் என்டு சொல்லுறா சேர். எங்கட ஊட்டுல வாப்பா போடுற சட்டத்த உம்மா மீற மாட்டா. ஆனால் இவ வாய்க்கு வாய் பேச வாரா சேர்"
"மாசத்துல ஒருநாளைக்கி வெளிய கூட்டிட்டுப் போகனுமாம். அப்பிடி யாருக்கிட்ட சேர் சல்லி இருக்குது. ஊட்டுக்குள்ளயே ஈக்கிற மனிசிக்கு என்னத்துக்கு சேர் நாலஞ்சி உடுப்பு. நானாச்சு வேலைக்குப் போறேன். ரெண்டு மூனு மாசத்துக்கு ஒருக்கா உடுப்பு வாங்குறேன். இவக்கு என்ன தேவ இருக்குது? இவக்கு இவட ஊட்டால ஒரு சொத்துமே குடுக்கல்ல. ஆனால் மாசா மாசம் ட்ரிப் போகவும், உடுப்பெடுக்கவும் எங்கிருந்து சேர் சல்லி. நான் டெய்லி வேலைக்குப் பெய்த்து வார மனுஷன். எத்துனயோ டென்ஷன்ல வார. சனி ஞாயிருல கூட்டாளிமாரோட வெளிய பெய்த்துட்டு வந்தால் ஊட்டுல ஈக்க ஏலா இவவயும் கூட்டிட்டு போக சொல்லுற. அப்பிடி என்ன சேர் ஈக்கிற. ஊட்டுல சும்மாதானே இருக்கிற இவங்க"
"ஊட்டுல வேல கூட என்டு வேலைக்காரி வேணுமாம். எங்கட உம்மா வயசாலி மனிசி என்டுதானே அவவப் பாத்துக்க இவவக் கூட்டி வந்த. தங்கச்சி மார் சின்னப் புள்ளகள். அவங்க ஒரு வேல செய்யாட்டியும் கொற".
"நீங்களே சொல்லுங்க சேர். இஸ்லாத்துல மனைவி தவறு செஞ்சால் கணவனுக்கு அடிக்க உரிமை இருக்கு தானே. இங்க அதுக்குத்தான் டிவோஸ் கேட்டு வந்தீக்கிறா!" என்றவாரே முடித்தான் ஹஸன்.
இருவரது முறைப்பாடையும் கேட்ட கவுன்ஸலர், ஒரு புன்னகையோடு பேசத் தொடங்கினார்.
"இஸ்லாம் கணவன்-மனைவி உறவைப் பத்தி பேசியிருக்கிறது. நீங்க சொன்ன விசயங்கள் எல்லாம் இஸ்லாம் சொல்லியிருக்கிறதுதான்" என்றார்.
ஹஸனுக்கு உச்சி குளிர்ந்து சென்றது. நான் பக்கமே தீர்வுகள் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து மனைவியைப் பார்த்து ஏளனச் சிரிப்பொன்றைச் சிரித்தான்.
"இஸ்லாத்தில் கணவனுக்கு மனைவி கட்டுப் பட்டு நடக்க வேண்டுமென்பது உண்மை தான். கணவன் திருப்தியடைந்தால்தான் மனைவி சுவர்க்கம் செல்ல முடியும் என்பதும் உண்மை. கணவன் கூப்பிடும் போதெல்லாம் மனைவி செல்ல வேண்டுமென்பது உண்மை.
ஆனால் ஒரு குடும்பம் என வரும் போது அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டுமென்பதாலேயே கணவனுக்கு மனைவி கட்டுப் பட வேண்டுமென இஸ்லாம் சொன்னது. அதன் அர்த்தம் மனைவியை அடிமையாக நடாத்துவது கிடையாது. ஒரு கம்பனியில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்றால், மேனேஜரின் கட்டளைகளைக் கேட்டு நடக்க வேண்டும். அப்போதே கம்பனி ஒழுங்காக இயங்கும். அதற்காக மேனேஜரின் அடக்குமுறையின் போதெல்லாம் அடங்கிப் போக வேண்டுமென்று அர்த்தம் இல்லையே"
"கணவர் அழைக்கும் போது மனைவி செல்ல வேண்டும். ஆனால் அதேவேளை மனைவி எந்த நிலையில் உள்ளார் என்பதை கணவன் உணர்ந்து கொள்ள வேண்டுமென்கிறது இஸ்லாம். கணவரின் திருப்தியில் மாத்திரமே சுவனம் செல்ல முடியும் என்ற அதேவேளை உங்களில் சிறந்தவர், மனைவியிடத்தில் சிறந்தவரே என்றார்கள் நபியவர்கள். சிறந்தவர்கள் தானே சுவர்க்கமும் போக முடியும்?" என்றார் அந்த கவுன்சலர்.
"அதுவெல்லாம் இருக்கட்டும் சேர். ஆனால் தீர்மானமெடுக்கும் போது ஆண்கள்தானே தீர்மானமெடுக்கோனும். பொம்புளகள் அதில தலையிடப் படாது தானே?" என்று கவுன்ஸலரை மடக்க அடுத்த பாய்ன்ட்டைப் போட்டான் ஹஸன்.
"முடிவெடுக்கும் அதிகாரம் வீட்டுத் தலைவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே இஸ்லாம் அவ்வாறு சொன்னது. அதன் அர்த்தம் மனைவியின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்க வேண்டுமென்று இல்லை. ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு குர்பான் கொடுத்து முடியை இறக்கச் சொன்ன போது யாரும் கேட்கவில்லை. அப்போது கவலையுடன் கூடாரத்தில் நுழைந்த நபியவர்களுக்கு "அவர்களுக்குச் சொன்னதை நீங்கள் முதலில் செய்யலாமே யா ரஸூலல்லாஹ்" என்று ஆலோசனை கூறியவர் நபியவர்களது மனைவியார் உம்மு சலாமா (ரலி) அவர்கள். அத்தனை பெரிய சங்கடமான சூழ்நிலையிலும் அவரது ஆலோசனையைக் கேட்டு முன்னே சென்று முடியை இறக்கி, குர்பானி கொடுத்தார்கள் நபியவர்கள். இதனைக் கண்டு சஹாபாக்களும் செய்தார்கள்" என்றார்.
இதுவரை இவ்வாறான எந்தவொரு வரலாற்றுச் செய்தியையும் கேட்டிராத ஹஸன், "இப்படியெல்லாம் இருக்கிறதா? அப்போ கணவனுக்கு பணிவிடை செய்து அவன் சொத்துக்களைப் பாதுகாத்து, அவன் இல்லாத நேரங்களில் பிற ஆண்களை வீட்டுக்குள்ளேயும் அனுமதிக்கக் கூடாது? என்றுதானே இஸ்லாம் சொல்கிறது. ஆனால் இவங்களுக்கு வேலைக்காரி வேணுமாம் சேர்!" என்றான்.
இதைக் கேட்டு சிரித்த கவுன்சலர் "ஹஸன், இஸ்லாத்துல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு வாழ ஆரம்பிக்கும் போது அவள் வீட்டில் வேலைக்கு ஆள் அமர்த்தப்பட்டு பழகியிருந்தால், நீங்கள் அவளோடு வாழ ஆரம்பிக்கும் போது, அதேபோல அவளுக்கு சேவகம் செய்ய ஒரு வேலையாளை நியமிக்க வேண்டும். நபியவர்கள் அவரது மனைவியருக்கு இவ்வாறு நியமித்து உள்ளார். அதேபோல உங்கள் பிள்ளையைப் பெற்று அவள் பால் ஊட்டுவாலேயானால், அது அவளுடைய குழந்தை எனுறாலும் அதற்கு உங்களிடம் ஊதியம் பெற உரிமை இருக்கிறது" என்றார்.
ஹஸனின் புருவங்கள் உயர்ந்தன. "இப்பிடி இஸ்லாத்துல ஈக்கிதா. பள்ளி ஹஸரத்துக்கிட்ட கேட்ட நேரம் இதெல்லாம் செல்லல்லயே சேர்" என்றான்.
"இன்னம் இருக்கு கேளுங்க. ஜாஹிலிய்யாக் காலத்துல பொம்புளப் புள்ளகள் பொறந்த நேரம் அது முஸீபத்து என்டு உசிரோட பொதச்சாங்க. ஆனால் பொம்புளப் புள்ளைகள் பொறந்து அவங்கள ஒழுங்கா வளத்தா சொர்க்கம் போக ஏலும் எண்டு சொல்லிச்சு இஸ்லாம். ஆம்புளப் புள்ளைகளுக்குக் கூட அப்பிடி சொல்லியில்ல தெரியுமா? பெண்களுக்கு என்டே தனி சூறா ஒன்ட "அந்நிஸா" என்டு எறக்கினான் அல்லாஹ். ஆண்களில் நபிமார்களின் பெயர்கள்ல மாத்திரமே சூராக்கள் அருளப் பட்டிருந்தாலும், மர்யம் (அலை) க்கு என்டே ஒரு சூறாவ இறக்கினான் இறைவன்"
"அவங்க எல்லாம் நபிமார்கள்ட தாயாரே சேர். இந்தப் பொம்புளகள்தான் அதிகமா நரகத்துல கண்டதா நபியவங்க சொன்னாங்களே?" மறுத்து தனது கருத்தைப் புகுத்தினான் ஹஸன்.
"இந்தக் காலத்துல நெறய ஹஸரத்து மார் அதையே சொல்லுறதே தவிர அத எப்பிடித் தடுக்குற என்டு பயான் பன்னுறாங்க இல்லையே? ஒங்களப் பாருங்க. நீங்க உழைக்கிறீங்க. வெளிய போறீங்க. ஒங்களுக்குத் தேவையானத வாங்குறீங்க. ஆனால் மனைவி விசயத்துல நீங்க நீதியில்லாம நடக்குறீங்க. ஒங்கட மனைவியுடைய எல்லா செலவுகளையும் நீங்கதான் பாத்துக்கோனும். அவ சம்பாதிச்சாலும் அவக்கிட்ட ஒரு சதம் குடும்பச் செலவுக்கு ஒங்களுக்கு வாங்க உரிமையில்ல. அவ விரும்பினா மட்டுமே ஒங்களுக்குத் தர ஏலும். நீங்க சீனதம் வாங்கி ஈக்கிறேங்க. அது இஸ்லாத்துல இல்ல. ஆனால் மஹர் கட்டாயம் மனைவிக்கிக் குடுக்கோனும்"
"நான் ஆயிரத்தி ஒரு ரூபா குடுத்தீக்கிறேன் சேர். அது தானே பரம்பரை பரம்பரையா செஞ்சி வாரோம்?" இடையில் குறுக்கிட்டான் ஹஸன்.
"போதுமா, போதாவா என்டு முடிவெடுக்க வேண்டியது அவ. நீங்க இல்ல. ஒங்களுக்கு அவகிட்ட, நீ இவளோதான் கேக்க ஏலும் என்டு சொல்ல ஏலா. அதே போல ஆயிரத்தி ஒரு ரூபா, நூத்தி ஒரு ரூபா என்றது எல்லாம் இஸ்லாம் சொன்ன முறையல்ல. அதுக்குப் பதிலா அவகிட்ட நீங்க என்ன தரோனும், எவளோ தரோனும் என்டு கேட்டீக்கோனும். ஒங்களுக்குத் தெரியுமா? உமர் (ரலி) காலத்துல மஹர் தொகைக்கு ஒரு கட்டுப்பாடு விதிச்சப்போ ஒரு பெண் எழுந்து நின்டு இஸ்லாம் வழங்கிய சலுகைல நீங்க எப்பிடி தலையிட முடியும்?" னு கலீபாவையே எதிர்த்துக் கேள்வி கேட்டாங்க. அப்போ அதுக்கு மன்னிப்புக் கேட்டு அந்த கட்டுப்பாட்டையே நீக்கினாங்க" என்றார்.
விழி பிதுங்கி நின்ற ஹஸனிடம் மேலும் தொடர்ந்தார் அந்த கவுன்சலர்.
"நபியவங்க மனைவியருக்கு வீட்டு வேலைகளில் உதவி இருக்கிறாங்க. வெளியே போகும் போது கூடவே கூட்டிப் போயிருக்கிறாங்க. ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துப் பங்கிடும் போது கூட அவரது மகளுக்கு, தாய்க்கு, மனைவிக்கு என்று பகிறும் படி அல்குர்ஆன் சொல்லுது. நீங்க வீட்டுச் செலவுக்கு குறைவான காசு கொடுத்தால், உங்க அனுமதியில்லாம மனைவிக்கு உங்க காசை எடுக்கலாம். அதற்கும் அனுமதியிருக்கு" என்றார் அவர்.
தனக்கு எல்லாமே எதிராக உள்ளதே. எதைச் சொல்லி மடக்குவது என்று யோசித்து விட்டு, "மனைவி தவறு செய்தால் இஸ்லாம் அடிக்கலாம் என்று சொல்லுது தானே சேர்?" என்றார்.
"மனைவி தவறு செய்தால் அடிக்கலாம் என்றார், நீங்கள் தவறு செஞ்சால் யார் ஒங்களுக்கு அடிக்கிறது?" திருப்பிக் கேட்ட கவுன்ஸலரின் கேள்விக்கு ஹஸனிடம் விடையில்லை.
"எந்த அநியாயமும் செய்யாத, நீதியாக, இஸ்லாம் சொல்லும் பிரகாரம் மனைவியினது கடமைகளை நிறைவேற்றி நடக்கும் கணவனுக்கு மனைவி தவறு செய்தால் தண்டிக்கும் உரிமை உள்ளது. ஆனால் நீங்க நினைப்பது போல எடுத்தவுடன் கை ஓங்குவது இல்லை. அதற்கு முதல் நீங்கள் இஸ்லாம் சொல்லும் பிரகாரம் நடக்க வேண்டும். மனைவி தவறு செய்தவுடன் எடுத்த எடுப்பில் கையை ஓங்கச் சொல்லவில்லை.
முதலில் அழகிய முறையில் அவர்களது பிழையை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு உபதேசம் செய்யச் சொல்லியிருக்கிறது இஸ்லாம். அதை அவர்கள் கேட்கவில்லையா படுக்கையைப் பிரித்து வையுங்கள். அப்போதாவது திருந்துகிறாளா என்று பாருங்கள். அதுவும் இல்லையா, அப்படியென்றால் இலேசாக அடியுங்கள். அடிக்கும் போது காயங்களோ, தலும்புகளோ வரக் கூடாது என்றால் அதனை எந்தளவு இலேசாகக் கையாள வேண்டுமென்று இஸ்லாம் சொல்கிறது என்பதை நீங்கள் புறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் நபியவர்கள் தனது மனைவியருக்கு எதிராக கையை ஓங்கியது கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரயுமா? ஆனால் இப்போது இதுவெல்லாமா நடக்கிறது. எடுத்ததும் கண்ணத்தில் ஓங்குகிறார்கள். மாட்டுக்கு அடிப்பது போல அடிக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயமாகும் என்று ஹஸனைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
"பொண்டாட்டிக்கு அடிக்க ஏலும் என்டுதானே பள்ளி ஹஸரத் சொல்லித் தந்தாரே தவிர, இதுவொன்டும் சொல்லித் தரல்லயே" என்று முணுமுணுத்துக் கொண்டே தொடர்ந்தான்.
"சேர், இந்தளவு விசயங்கள் இருக்கிறது வேற யாரும் சொல்லித் தந்தில்ல. வேற என்ன இஸ்லாம் சொல்லுது இந்தப் பொம்புளகள் விசயத்துல?"
"ஆம்புளகளுக்கு எந்தளவு உரிமை வழங்கியிருக்குதோ, அந்தளவு பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கு இஸ்லாம். கலியாணம் முடிக்கும் போது ஆம்புளக்கி தான் விரும்பின பெண்ணைத் திருமணம் செய்ய தெரிவு செய்யலாம் என்றது போல பொம்புளக்கிம் தான் விரும்பின ஆணைத் தெரிவு செய்யலாம். இவரைத்தான் கலியாணம் கட்டோனும் என்டு கட்டாயப்படுத்த முடியாது. அது மட்டும் இல்ல. குடும்பச் சொத்துல உரிமை, படிக்கிறதுல உரிமை, தான் விரும்புறத செய்யிரதுல உரிமை, ஒரு கணவன் மனைவிக்கு தலாக் மூலம் விவாகரத்துப் பெறுவது போல பஸ்உ என்று பெண்களுக்கும் தனது கணவர் மூலம் விவாகரத்துப் பெறலாம் என்று எல்லாத்துலயும் ஆண்களுக்குப் போலவே பெண்ணுக்கும் உரிமையை இஸ்லாத்துல வழங்கியிருக்கு. நபியவர்கள் காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் அவர்களிடத்தில் தேடிச் சென்று கேள்விகள் கேட்டார்கள். மார்க்கத்தைக் கற்றார்கள். சந்தேகங்களைக் கேட்டார்கள். அவ்வளவு ஏன், தங்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கைத் தரத்தை அமைத்துத் தரும்படி நபியவர்களது மனைவிமார் நபியவர்களிடமே போய் கேட்டிருக்கிறார்கள் என்றால் நபியவர்கள் அவரது மனைவியருக்கு எந்தளவு கேட்கும் சுதந்திரத்தை வழங்கியிருந்திருப்பார்கள்?
"நீங்கள் தலாக்கே வழங்கினாலும் வழங்கும் வரை அவளது செலவுகளை நீங்களே பார்க்க வேண்டும். பிரிந்து சென்றாலும் நீங்கள் மஹராக வழங்கியதை திருப்பி எடுக்க முடியாது. உங்களது பிள்ளைகள் அவளிடம் வளர்ந்தாலும் நீங்களே அவர்கள் பெரியவராகும் வரை செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்"
"இன்னொரு படி மேல சொல்லப் போனால் ஒரு பெண் பிள்ளை பிறந்து அவளை ஒழுக்கமாக வளர்த்தால் அவளது தந்தை சுவனம் செல்வான். மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர் என்றால், நிச்சயமாக சிறந்தவருக்குத்தானே சொர்க்கம் உள்ளது. அதே போல தாயின் பாதடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இவற்றையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள்" என்றார் கவுன்ஸளர்.
"இவ்வளவு நாளும் மனைவி என்பவள் தனக்கு சேவகம் செய்ய உள்ளவள்" என நினைத்துக் கொண்டிருந்த ஹஸனுக்கு இவையெல்லாம் புதுசாக இருந்தது. தன் தவறுகளை உணர்ந்து கொண்ட அவன், இனிமேல் மனைவியுடன் ஒழுங்காக நடந்து கொள்வதாக வாக்குறுதி அளித்தான்.
இஸ்லாம் பெண்களுக்கு இன்னுமென்ன சலுகைகளை வழங்கியுள்ளது என்று தேடித் தேடி படிக்க ஆரம்பித்தான். தம்மைச் சுற்றியுள்ள மூடக் கதைகள், பெண் ஒடுக்குமுறை வசனங்களைத் தூக்கியெறிந்தான். அவர்களது வாழ்க்கை சந்தோசமாக விட்டுக் கொடுப்போடு சென்றது.
தான் மனைவிக்கு வழங்கிய "மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்" என்ற புத்தகத்தைப் பார்த்து விட்டு, "பெண் எப்படி அடிமையானாள்" என்று ஒரு புத்தகம் எழுத தலையங்கம் இட்டான்.
-சாபித் தாஹா-
0 Comments