நாட்டின் பொருளாதாரத்தை செழிப்பாக கொண்டு செல்வது தொடர்பில் அ ஆ கூட தெரியாத மஹிந்த ராஜபக்ஷ ஒரு தோல்வியுற்ற ஆட்சியாளர், எவ்வித விம்பமும் இல்லாத ஆட்சியாளர் என்று தம்பர அமில தேரர் கடுமையாக சாடியுள்ளார்.
சில பௌத்த மத தலைவர்கள் பௌத்த தர்மத்தின் அடிப்படை போதனைகளை புறந்தள்ளி விட்டு, தம்முடைய சில உபதேசங்களை சமூகமயப்படுத்த முயற்சித்து வருவதாகவும் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் இணைந்து நேற்று கொழும்பில் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த கருத்தரங்கில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தம்பர அமில தேரர்,
மஹிந்த ராஜபக்ஸ எந்த நோக்கும் இல்லாத தோல்வியான ஆட்சியாளர். அவரிடம் எந்த நோக்கும் இருக்கவில்லை.
நாட்டை பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்லும் விடயத்தில் அவருக்கு அரிச்சுவடி கூட தெரியாது.
இருந்த பல்குழல் பீரங்கி குண்டுகளை பயன்படுத்தி யுத்தத்தை மட்டுமே செய்தார். அந்த பல்குழல் பீரங்கிகளும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டவை.
மதவாதமும், இனவாதமுமே தோல்வியான அரசியல்வாதிகளின் ஒரே ஆயுதம். மஹிந்த ராஜபக்ஸ தற்போது அதனை செய்கிறார்.
ரதன தேரர், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அஸ்கிரிய விகாரையில் இருப்பவர்களும் இந்த ஆயுதத்தையே பயன்படுத்துகின்றனர்.
கர்தினாலும் சில நேரம் இதனை செய்கிறார் எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments