Subscribe Us

header ads

வெளிநாட்டு வாழ்க்கையும் வெற்றுத்தலைகளின் விமர்சனங்களும்...


வெளிநாட்டு வாழ்க்கை என்பது எந்தவொரு ஆணோ, பெண்ணோ விரும்பி ஏற்கின்ற ஒரு வாழ்க்கையல்ல. மாறாக காலத்தின் கட்டாயத்தால் பலருடைய தலையிலும் தோள்களிலும் வலிந்து சுமத்தப்படுகின்ற ஒரு வலிமையான சுமைதான் இந்த வெளிநாட்டு வாழ்க்கையாகும்.
இந்த வாழ்க்கையின் வலிகளைப்பற்றி அதிகமாக நான் இங்கு விபரிக்கவேண்டியதில்லை. ஏனெனில் சமகால சூழலில் இது கணிசமான குடும்பங்களில் சாதரணமாகிப்போய் ஒரு விடயம். இருந்தாலும் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை கேவலமாக, ஏளனமாக விமர்சிக்கின்ற, ஆணவத்தில் ஆடுகின்ற சில மனநோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மிகச்சில வரிகளை வடிக்கிறேன்.
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள், அவர்கள் எவ்வளவுதான் உயர்ந்த வேலைகளில், அதிகூடிய ஊதியத்தில் பணியாற்றினாலும் சரி. அது அவர்களுக்கு உடலுக்கும் உள்ளத்திற்கும் பூரணமான ஆறுதலையும் நிம்மதியையும் கொடுக்குமா என்று கேட்டால் இல்லையென்பதே ஒரே பதில்.
காலையில் எழுந்து இரவில் தூங்கச் செல்லும் வரைக்கும், ஏன் தூக்கத்தில் கூட இவர்கள் ஒரு கணமேனும் தனது மனைவியை, குழந்தைகளை, தாய், தந்தையர்களை நினைக்காமல் இருப்பதில்லை. நல்ல உணவுகளை உண்ணக்கிடைத்தால் அது 'தனது குடும்பத்திற்கு கிடைக்கவில்லையே' என்றும் சுமாரான உணவுகள் கிடைத்தால் 'நாம் இவ்வாறு சாப்பிட்டாலும் நாட்டில் நமது குழந்தைகள் நன்றாக உண்கிறார்கள்தானே' என்றும் மனதை ஆறுதல் படுத்திக்கொள்வது இவர்களுடைய வாடிக்கையான ஒரு விடயம்.
அதேபோன்றுதான் நாட்டில் இவர்களுடைய குடும்பங்களுடைய நிலையும்.
ஏதோ கணவன்மார்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மனைவிமார்கள் இங்கே சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று மனசாட்சியில்லாத சிலர் மிக இலகுவாகக் கூறிவிடலாம். ஆனால் இந்த "அனுப்பிவைத்துவிட்டு" என்ற வார்த்தையே தவறானது. ஏனென்றால் யாரும் தன்னுடைய கணவனை மனமுவந்து அனுப்பிவைப்பதில்லை. ஒரு கணவன் தனது மனைவியை விட்டுப்பிரிந்து வெளிநாடு செல்கின்ற அந்த கடைசி நிமிடம் இந்த உலகத்தில் எத்தகையதொரு வேதனைமிக்கதொரு நேரம் என்பதை அனுபவத்தைத்தவிர வேறு எதனைக்கொண்டும் அறிந்துவிட முடியாது.
கணவன் விமானமேறியதும் தந்தையை இழந்து வாடி நிற்கின்ற குழந்தையின் முகம், வெறுமையை உணர்த்தும் வீடு... என அக்கணவன் திரும்பி வரும்வரைக்கும் வேதனையின் உறைவிடமாக மாறும் அந்த இல்லங்களின் விரக்திநிலையை வர்ணிக்க வார்த்தைகள் பஞ்சம்.
ஆனாலும் தனக்கு வாழ்கின்ற நாட்டிலேயே, ஊரிலேயே அல்லாஹ் வளமான வாழ்வாதாரத்தை தந்திருக்கிறான் என்று சந்தோசப்பட்டு அல்லாஹ்வை புகழவேண்டிய நாவுகளும் விரல்களும் வெளிநாட்டு வாழ்க்கையை பகிரங்கப் பொதுவெளிகளில் இகழ்ந்துரைக்கும்போதுதான் சில கடினமான உணர்வுகள் கட்டுடைக்கப்படுகின்றன.
இன்று நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை முறை தலைகீழாக மாறி நாளை நீங்களும் ஒரு விமானப்பயணத்தினூடாக எங்களுடைய வேதனையான வாழ்வை அடைந்துவிடமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?
எனவே அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வாழ்க்கையை நன்றியுடன் பொருந்திக்கொள்ளுங்கள். எங்களுடைய வேதனையில் பங்கெடுப்பதற்காக நாங்கள் உங்களை ஒருநாளும் துணைக்கழைக்கவில்லை.
தாஹிரா நஸீர்
20/06/2018

Post a Comment

0 Comments