ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த புளூ வேல் கேமினை உருவாக்க பின்புலமாக செயல்பட்டதாக 17 வயது பெண்மணியை ரஷ்ய போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் சுமார் 100-க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து உயிரிழக்க காரணமாக இருக்கும் புளூ வேல் கேம் உருவாக்க முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டதாக 17 வயது பெண்மணி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் புளூ வேல் சேலன்ஜ் என்ற பெயரில் வலம் வரும் ஆன்லைன் கேமினை 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். 50 நாட்களும் கேம் விளையாடுவோருக்கு கடினமான சவால்கள் வழங்கப்படும், திகில் நிறைந்த திரைப்படங்கள், அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, அவர்களை தற்கொலைக்கு தூன்டும் வகையில் பல்வேறு சவால்கள் மற்றும் கைகளில் புளூ வேல் என கிழித்துக் கொள்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. புளூ வேல் இறுதி சவால் போட்டியாளர் தற்கொலை செய்து உயிரிழக்க வேண்டும்.
ரஷ்ய உளவுத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெயர் அறியப்படாத பெண்மணி புளூ வேல் கேம் விளையாடி, இறுதியில் தனது உயிரைவிடாமல் புளூ வேல் தளத்தை இயக்கும் பணியினை ஏற்றுக் கொண்டு பல்வேறு இளைஞர்களை கேம் விளையாட தூண்டி வருகிறார். மேலும் இந்த கேம் விளையாட பெண் தன்னை ஆணாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து கொடூரமான வரைப்படங்கள், புளூ வேல் சவால்களை உருவாக்கியவரும், நிறுவனரான 22-வயது பிலிப் புடெய்கின் வரைபடம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக பிலிப் புடெய்கின் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் கைது செய்யப்பட்ட பெண்மணி போட்டியில் கலந்து கொண்டவர்கள் போட்டி விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் போட்டியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கொலை செய்வோம் என்ற வகையில் மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளூ வேல் தளத்தை இயக்கும் வகையில் பல்வேறு சவால்கள் மட்டுமின்றி போட்டியாளர்களை மிரட்டும் பணியினை அந்த பெண்மணி செய்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments