மத்திய கிழக்கில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் பிரச்சினைகளும், பொறுப்புகளும், கடமைகளும், நம் உறவுகளிடத்தினிலும், நம்மை நம்பி இருக்கின்றவர்களிடத்தினிலும், நமது தாய் நாட்டிலும் இருக்கின்றது, அவைகளை நாம் நிறைவேற்றுவதற்காக வேண்டியே தேசம் கடந்து வந்து வாழ்ந்தும், வாடியும், கொண்டுமிருக்கின்றோம். நமது இலக்குகள் அத்தனையும் நமது குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் மட்டும் இருந்தால் நல்லது.
நமது நாட்டில் ஏற்படும் அரசியல் சல சலசலப்பை போன்றதுதான் மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையும், மத்திய கிழக்கில் யுத்தம் ஒன்று வரவேண்டும் மத்திய கிழக்கு சீரழிய வேண்டும் என்பதே பல இஸ்லாமிய விரோத சக்திகளின் கூட்டு முயற்ச்சியாகவும் எண்ணமாகவும், விருப்பமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அதற்கான காய் நகர்த்தல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள், சமாதானத்தை விரும்பும் வேறு சில நாடுகள் இந்த பிரச்சினைக்குள் தலையிட்டு சிலவேளை பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க முயற்சிக்கவும் கூடும்.
தொழிலுக்காக வந்த நாம் பல்வேறு அரபு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அந்த நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அமைய ##We Support Qatar# #We Support UAE# #We Support KSA# என்றெல்லாம் கூவிக்கொண்டும் ப்ரோபைல் பிக்சரை மாற்றிக்கொண்டும் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்றே எண்ண தோன்றுகின்றது, நாம் சார்ந்து வாழும் நாடுகளுக்கு நாம் ஆதரவு வழங்குவதற்கு இங்கு நடைபெறுவது உதைப்பந்தாட்ட போட்டியோ, கிரிக்கெட் போட்டியோ அல்ல, அது மிகப்பெரிய அரசியல் இராஜதந்திர நகர்வு. நாம் வந்தோமா தொழிலை செய்து சம்பளத்தை பெற்று குடும்பத்திற்கு அனுப்பினோமா என்று மட்டும் இருந்து கொண்டால் நமக்கு நல்லது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தாம் வாழும் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக நினைத்துக்கொண்டு அடுத்த நாட்டில் வாழும் தனது சொந்த நாட்டுக்காரனையே எதிரியாக பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் இதைவிட முட்டாள்தனத்தை எங்கு சென்று நாம் தேட முடியும், எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு வழங்குவதால் நமக்கென எந்தவொரு இலாபமும் ஏற்பட்டு விட போவதில்லை. சண்டைகள் ஏற்படுகின்ற பட்சத்தில் முதலில் வெளிநாட்டு தொழிலாளர்களையே அவர்கள் வெளியேற்றுவார்கள், ஆகையினால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டுக்கு சென்றுவிட முயற்சி செய்யுங்கள்.
ஈராக் - குவைட் யுத்தம் நடந்த போதும் சரி, லிபியா, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள் நாட்டு கலவரங்கள் நடந்த போதும் சரி மொத்தமாக பாதிக்கப்பட்டது வெளிநாட்டு தொழிலாளிகளே என்பதை மறந்து விடாதீர்கள், அது போல இங்கும் அப்படியொரு துர்ப்பாக்கியமான நிகழ்வு ஏற்பட்டால் பாதிக்கப்படுவது அத்தனை தொழிலாளிகளும்தான், மாறாக நீங்கள் ஆதரவு வழங்கும் நாடு உங்களுக்கு அடைக்கலம் தராது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்த இக்கட்டான நிலைமையும் இன்னும் கொஞ்ச நாட்களில் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் பிராத்தனை புரியுங்கள் அமைதி நீடிக்க.
-Razana Manaf
0 Comments