பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பசுமாடுகளை திருடிச்சென்ற திருடனை பிடித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பிடிக்கப்பட்ட நபருடன் வந்ததாக கூறப்படும் மற்றுமொருவரை தேடும் முயற்சியில் அவ்விளைஞர் குழு தற்போது ஈடுபட்டுள்ளது.
குறித்த திருட்டு நல்லுார் சங்கிலியன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளதுடன் கன்று ஈன்ற நிலையில் நின்ற பசு மாடு ஒன்றினையே இறைச்சிக்காக குறித்த திருடர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் அப்பகுதி இளைஞர்களினால் பசு மாட்டினை கடத்தும் போது பிடிக்கபட்ட திருடனை காலை வேளை அவ்வீதியினால் சென்ற ஒரு சிலர் கடுமையாக தாக்கினர்.
இது தவிர சில முதியோர்கள் அவ்விடத்திற்கு வந்து விடுத்த வேண்டுகோளினை அடுத்து பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிசாரால் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான திருடனை மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
எனினும் திருடனை தாக்கிய விதம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
மேலும் அண்மைகாலமாக யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மாடுகள் கடத்துவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







0 Comments