Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (காதிக் கோர்ட்டில்) கவிதை தொகுப்பு.



தாரம் என்று சொன்னதைத்
தரவில்லை- ஆதலால்
தாரம் எனக்கு வேண்டாம்
தலாக்குத் தாருங்கள்.

தாரம் என்று சொன்னதற்கு
ஆ'தாரம்' இருக்கிறதா

ஆ..தாரம் என்று சொன்னீர்
அன்று கேட்டபோது.
சே'தாரம்' ஆக்க வேண்டாம்
செய்த ஒப்பந்தத்தை

சே..தாரம் என்று சொன்னதை
செய்து தராது போனால்
தாரம் வேண்டாமென்று
தூரம் ஆகுதல் தரமா?

பொருளா? தாரமா
பொறுமையாய் முடிவு செய்வீர்

பொருளா'தாரம்' இன்றேல்
பொருளில்லை வாழ்விலே

பூ'தாரம்' ஆக்க வேண்டாம்
பொருள் தராத பிரச்சினையை
சேதாரம் ஆக்க வேண்டாம்
சிறுசுகளின் வாழ்க்கையினை.

காதிக் கோர்ட் கலைந்தது.
பொருள் இல்லாத் தாரம்
புறந்த வீடு போனது.
தாரம் என்ற பொருள் தந்தால்
வாரம் என்று சொன்னான்.

வாரம் பல பார்த்திருக்கிறாள்
வாரம் என்று சொன்னவன்
வருவான் என்று.

தேடி வருவானோ?
ஓடி விடுவானோ?
முடிவு வருமா
விடிவு வருமா 
அடிக்கடி சமூகத்தில்
அரங்கேறும் இப் பிரச்சினைக்கு?

Post a Comment

0 Comments