இலக்கணம் பேணி
இலக்கியம் போல
இன் கவி எழுது -உன்
இலக்கு
இனிய தமிழுக்கு
எற்றம் கொடுப்பதென்றால்
தலைக் கனம் காட்டி
தட்டிக் கழித்து
தானே கவியென
தமிழ்க் கவி எழுது - உன்
கவி மூலம்
கர்வம்
காட்ட வேண்டுமென்றால்
கிண்டல் பண்ணி
சண்டை பாணியில்
கண்டபடி எழுது
உனக்கென கூட்டம்
உருவாக வேண்டுமென்றால்
பேச்சு மொழியில்
பிற மொழி கலந்து
காணும் நிகழ்வுகளை
கவிதையாய் எழுது.
சொல்லுகிற விடயம்
உள்ளத்தைத் தொட்டு
மெல்லிய தாக்கமேனும்
கொள்ள வேண்டுமென்றால்.
தற்கொலை என்பதை
தற் கொளை என்று
சொற் கொலை செய்வது
நற் கவி தராது.
கவிதை வெறுப்போர்
கற்களை வீசுவார்
கண்டபடி எழுதுவார்.
எதுகை மோனை
எதுவும் பிறழாது
இதுதான் கவியென
யாரும் சொல்ல
புதுமைக் கவிகளைப்
புத்துருவாக்குவோர்
மதிக்கப் படுகிறார்
மனதில் வாழ்கிறார்.
பாரதி பாடினும்
யாரதைப் பாடினும்
கூறுகின்ற கருத்தில்
தூர நோக்கிருந்தால்
பேரும் புகழும்
பேறும் பெற்றுத் தரும்.
0 Comments