Subscribe Us

header ads

கிராம அபிவிருத்திச் சங்கங்கள் செயலற்றுப் போயுள்ளன -கிழக்கு முதல்வர் குற்றச்சாட்டு


கிராமங்களில் ஒட்டுமொத்த அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவேண்டிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் செயலற்றுள்ளதால், அபிவிருத்திச் செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்களுடனான சந்திப்பு ஏறாவூர் நகர கலாசார மண்டபத்தில்  நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், '

பதிவை மாத்திரம் மேற்கொண்டுவிட்டு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஒருசிலர் அவ்வப்போது கிடைக்கும் ஒப்பந்த வேலைகளைச் செய்வதற்காக இயங்குவதால் மாத்திரம் கிராமங்கள்; அபிவிருத்தி அடையாது. ஒப்பந்த வேலைகளை மாத்திரம் செய்வதற்காக  மாத்திரம்; கிராம மற்றும் மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள் உருவாக்கப்படவில்லை. மேற்படி சங்கங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் கிராமங்களின்; அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கேயாகும். ஆனால், நடைமுறையில் இது நடப்பதில்லை. கிராம மற்றும் மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவுள்ள அரசாங்கத்தின் அடிமட்ட அமைப்புகளாகும்.

 அதனால், இந்த அமைப்புகள் மிகவும் பலம் வாய்ந்த அமைப்புகளாகச் செயற்படமுடியும்' என்றார். 'கிராமங்களிலுள்ள சகல தரவுகள், அங்குள்ள தேவைகள், சாத்தியப்பாடான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகளை கிராம அபிவிருத்தி மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் வைத்திருக்கவேண்டும். ஆனால், தற்போதைய நடைமுறையில் இவை எதுவுமின்றி வெறும் பதிவு இலக்கத்துடன் மாத்திரம் கிராம மற்றும் மகளிர் அபிவிருத்திச் சங்கங்கள் செயலற்றுக் கிடக்கின்றன. இந்த நிலைமையை மாற்றிச் சுறுசுறுப்புடன் இயங்கும் அமைப்புகளாக கிராம மற்றும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை மாற்றினால் பல்வேறு அபிவிருத்திகளை கிராமங்கள் அடையமுடியும்' எனவும் அவர் கூறினார்.

Post a Comment

0 Comments