இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் மின் சக்தி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார செலவுகள் உயர்வடைந்துள்ளமையினால் மீண்டும் மின்சாரம் தடையேற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயர்வடையும் மின்சார செலவு 1913 ஆம் ஆண்டில் 1% வீதத்தில் காணப்பட்டதாகவும், 2015ஆம் ஆண்டு வரையில் 7% வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உயர்விற்கு பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்படாமையே காரணம் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கப்படும் மின்சார தேவையை ஈடு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவோட் திறன் கொண்ட சம்பூர் அனல் மின் நிலையத் திட்டம் கைவிடப்பட்டமை குறித்து பொறியியலாளர்களால் அவதானம் செலுத்தியுள்ளனர்.
2016ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்த போதிலும் தற்போது வரையில் அது தாமதமாகியுள்ள நிலையில் 2020ஆம் ஆண்டு இறுதிக்கு நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஆரம்ப தீர்மானத்தை மாற்றி இயற்கை எரிவாயுவிற்கு மாற்ற மேற்கொண்ட தீர்மானத்தினால் இந்த திட்டம் தாமதமடைந்துள்ளது. இதன் முடிவாக அவசியமான அனுமதி மற்றும் ஒப்பந்தம் ஒன்றை தயாரிப்பதற்கு மேலும் தாமதம் ஏற்படலாம்.
இயற்கை எரிவாயுவிற்கு மாற்றப்பட்டமையின் முடிவாக மின்சார உற்பத்தி செலவு 40%- 50% வரை உயர்வடைந்துள்ளது.
சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தின் தாமதத்தினால் நாடு மின்சார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாடு இருளில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை கனவாக மாறிவிடும். அதன் முடிவாக நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என நிபுணர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


0 Comments