Subscribe Us

கிழக்கு ஆளுநராக முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாஹ் நியமிக்க பட வேண்டும்


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை கொடுத்து நல்லாட்சி அரசாங்கம் அழகு பார்க்க வேண்டும் என (NDPHR)தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் அமைப்பாளரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அஹமட் புர்க்கான் JP கருத்து வெளியிட்டுள்ளார்

அவர் தொடர்ந்தும் கூறுகையில் இலங்கையை ஆக்கிரமித்திருந்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு முஸ்லிம்களின் தரப்பில்  இறுதிவரை நன்றிக்கடனுக்கடனுடன் இருந்த முஸ்லிம்கள் தலைவர்களுல் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் முதன்மையானவர் ஆவார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் MHM அஸ்ரப் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்து அன்னாரின் கனவுகளைச் சுமந்த போராளிகளில் இன்றும் அன்னாருடைய வழியில் பயணிப்பவராக சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களை நான்பார்க்கிறேன்.

அன்று தலைவர் கூறிய கூற்றுக்கேற்ப "ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் நான் ஏறவும் மாட்டேன். எனது போராளிகளும் ஏறவும் மாட்டார்கள்" என்ற அவரது கருத்தோடு என்றும் உடன்பாடுள்ள ஒருவராய் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் இன்றும் இருந்து வருகிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களின் மறைவின் பின்னரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் அக்கட்சியினுடைய அமைச்சர்களும் கடந்த பதினாறு வருட காலமாக கிழக்கு மாகாண  மக்களுக்கு எதுவிதமான அபிவிருத்தியையோ, சேவைகளையோ செய்யாத நிலையில் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மிகவும் அர்ப்பணிப்புடன் தனது அதிகாரத்தில் பல அபிவிருத்தி பணிகளை பாராபட்சம் பாராது செய்து வெற்றிகண்டு முஸ்லிம் தலைவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார் மட்டுமல்லாது நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களின் மூலமாக தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் நீண்ட நாள் கனவான வடக்கு கிழக்கு பிரிப்பை ஏற்படுத்தி இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான அங்கீகாரத்தை பெறுவதற்கு பாடுபட்டு இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை பெருவதற்கு பெரும்பங்காற்றியவரே சகோதரர் அதாவுல்லாஹ்.

கடந்த மகிந்த ராஜபக்ஷ அவர்களின் கடைசி இரண்டு வருட கரைபடிந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகம் தாக்கப்பட்டதற்காய் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களை பழிவாங்கிய அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அதே ஆட்சியின் பங்காளிகளாக (நீதி அமைச்சராக) இருந்த முஸ்லிம் காங்கிரஸை பழிவாங்காமல் மு.கா மாயாஜால வார்த்தைக்குள் சிக்குண்டு கடந்த பொதுத்தேர்தலில் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களை நிராகரித்தது அம்பாறை மாவட்ட மக்கள் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாகும்.

அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி நாட்டின் ஒட்டு மொத்த  முஸ்லிம்களுக்கு தனிப் பெரும் அடையாளத்தை பெற்றுத் தந்த சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களின் வெற்றிடத்தை இதுவரையில் முஸ்லிம் காங்கிரஸினால் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி செய்ய முடியவில்லை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் கோரத் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தினந்தோறும் அச்சத்தால் கூனிக் குறுகிக் கிடந்த முஸ்லிம் சமூகம் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் பெற்ற விடுதலைக்கும் மறைந்த தலைவரின் கனவான வடக்கு கிழக்கு பிரிய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்தமைக்குமான கைமாறாகவே மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதை தவிற சகோதரர் அதாவுல்லாஹ் முஸ்லிம் சமூகத்திற்கு செய்த மன்னிக்க முடியாத குற்றம் என்ன என இந்த வேளையில் கேள்வியாக எழுப்புகிறேன்.

இன்று நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற புதிய அரசியல் சீர்திருத்தம் சிறுபான்மை சமூகம் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமானதொன்று என நன்கறிந்தும் சில அற்ப சுகபோக இலாபங்களுக்காக மிதவாத சிந்தனை வாதிகளான தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து மீண்டும் வடக்கையும், கிழக்கையும் இணைத்து முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றி தங்களுடைய அரசியல் பதவிகளை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக  சமூகத்தின் முதுகில் சவாரி செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது எனவே மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் நாமத்தை மாசுபடுத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தின் முகத்திரையையும் கிழிக்க வேண்டுமாயின் சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களைப் போன்றவர்களின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை குறிவைத்து அம்பாறை மாவட்டத்தில் தனக்கென இரண்டு சபைகளையாவது கைப்பற்றவே இன்று சுதந்திர கட்சிக்கு சகோதரர்  அதாவுல்லாஹ் அவர்களின் உதவி தேவைப்படுகிறது அதன் காரணமாகவே இன்று நல்லாட்சி அரசாங்கம் அழைத்தும் இருக்கிறது எனவே முஸ்லிம்களின் வாக்குகளை நல்லாட்சி பெற வேண்மாயின் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தை கைவிட்டு அதற்கு சாட்சியாக  கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநராக சகோதரர் அதாவுல்லாஹ் அவர்களை நியமித்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்கொள்ளும் எனவும் நிச்சயமாக எமது கருத்துக்களை மக்கள் ஏற்பார்கள்   எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்

Post a Comment

0 Comments