மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்ப்பினாலேயே தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்ப்புகள் வரும் போது அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடைமை அரசுக்கு உள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் பிரச்சினைகள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரிடமும் அது முறைப்பாடு செய்துள்ளது. இதனால் வீட்டுத் திட்டம் தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், எதிர்புகள் வரும் போது அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடமை நல்லாட்சி அரசுக்கு உள்ளது. அதற்கமையவே த.தே.கூவின் கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் கலந்தாலோசித்து வருகிறோம்.- என்றார்.
“வடக்கு – கிழக்கில் நிவாரணப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை என குற்றம்சாட்டப்படுவதாக” ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இராஜாங்க அமைச்சர்,
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என ஒரு சில தரப்பினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை நான் நிராகரிக்கிறேன். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அப்பகுதிகளுக்கு விசேட நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நஷ்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். பிரதேச செயலகங்கள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தவிர,; அனர்த்த முகாமைத்து அமைச்சரை நான் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் அவரது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.- என்றார்.
media unit of State Minister of Rehabilitation and Resettlement


0 Comments