-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
கடந்த 04 நாட்கள் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தையொன்று வாய்க்காலில் விழுந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பலியாகியுள்ளதுடன், மாதம்பே பகுதியைச் சேர்ந்த அஜித் குஷான் பெர்ணான்டோ என்பவரும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
அத்துடன், நவகத்தேகமப் பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய எச்.எம். அபேசிங்க என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
மேலும், புத்தளத்தில் சுமார் 3,000க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தப்போவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமையால் 15 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தப்போவப் பகுதியிலுள்ள 10 கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளமையால், வெளிவேற முடியாமல் மக்கள் வீடுகளில் சிக்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களை மீட்க முடியாத நிலையில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதாகவும் எனினும், இம்மக்களை மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






0 Comments