இலங்கை அணியுடனான 3 ஆவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 83 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி18 ஓவர்களில் 82 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
இப்போட்டியில் இலங்கை அணியின்முன்வரிசை வீரர்கள் ஐவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
நிரோஷன் டிக்வெல்ல, திலகரட்ன தில்ஷான் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். தினேஷ் சந்திமால் 8 ஓட்டங்களுடனும் அசேல குணரட்ன 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இவ்வீரர்கள் நால்வரும் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மிலிந்த சிறிவர்தன ஆஷிஸ் நெஹ்ராவின் பந்துவீச்சில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தசுன் ஷானக்க 19 ஓட்டங்களுடன் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சீக்குகே பிரசன்ன 9 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
சச்சித்ர சேனநாயக்க 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திசர பெரேராவும் 12 ஓட்டங்களுடன் ரெய்னாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
தில்ஹார பெர்னாணடோ ஓர் ஓட்டத்துடன் பம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துஷ்மந்த சமீர ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார். சுரேஷ் ரெய்னா 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
சர்ச்சைக்குரிய தீர்ப்புகள்
இப்போட்டியில் நடுவர்களின் சில தீர்ப்புகள் சர்ச்சைக்குரியனவாக உள்ளன.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய "நடுவர்களின் தீர்ப்புகள் முழுமையாக ஏமாற்றமளிக்கின்றன. இந்தியாவுக்காக 13 பேர் விளையாடியதைப் போன்று உணர்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினரின் மோசமான ஷொட் தெரிவுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

0 Comments