சிங்கள பௌத்த பாடசாலைகளிலும் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனந்தா, நாலந்தா மற்றும் விசாக போன்ற முன்னணி சிங்கள பௌத்த பாடசாலைகள், ஏனைய சிறுபான்மை சமூக மாணவர்களுக்கும் கதவுகளை திறக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன அல்லது மத எல்லை நிர்ணயங்களை விதிப்பது பௌத்த மத கற்பிதங்களுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சிங்கள பௌத்த பாடசாலைகளில் தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியரை இணைத்துக் கொள்ளுமாறு குறித்த சிங்கள பௌத்த பாடசாலை அதிபர்களிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அதிபர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனவும், பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தமக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மாணவர் ஒருவரை தாம் ஆனந்தா கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாகவும் இரண்டு வருடங்களில் குறித்த மாணவர் தமக்கு நெருக்குதல்கள் ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்து பாடசாலையை விட்டு விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாகா, ஆனந்த, நாலந்தா போன்ற கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவ மாணவியர் தமிழ் முஸ்லிம் மாணவர்களுடன் தொடர்பு கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பமும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவிதமாக சில முஸ்லிம் தமிழ் பாடசாலைகளும் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் பற்றி கேள்வி எழுப்பிய போது சில இனவாத சக்திகள் முகநூல் ஊடாக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.(Jaffna Muslim)


0 Comments