உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும், அதில் அதிகபட்ச வன்முறைக்கு ஆளாவது பெண்களும் குழந்தைகளும் தான். அதற்கு சிரியாவைச் சேர்ந்த இந்த தாயும் அவரது குட்டி தேவதை மட்டும் விதி விலக்கா என்ன?
சிரியாவில் அரசுப் படையினரும் குர்து கிளர்ச்சி படையினரும் நீண்ட காலமாகவே போரிட்டு வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இத்தனை பேர் பலி என்று அடிக்கடி வரும் செய்திகள் பெரும்பாலும் இயல்பாகக் கடந்து போய்விடுகின்றன.
ஆனால் இந்த தாய்க்கு நிகழ்ந்த கொடூரமோ, ஒரு தாக்குதலின் கோர முகத்தை அப்பட்டமாகக் வெளிக்காட்டுகிறது. சிரியாவின் அலப்போ நகரில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்த கர்ப்பிணித்தாய் படுகாயமடைந்தார். தாக்குதலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட வெடிகுண்டில் இருக்கும் ஒரு சிறிய உலோகத்தண்டு அவரது வயிற்றில் தைத்தது.
வலியில் துடித்த அவருக்கு உடனடியாக சிசேரியன் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடி வயிற்றைக் கிழித்து இந்த பூமிக்கு கொண்டு வரப்பட்ட அந்த குட்டி தேவதையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். குழந்தையின் நெற்றியில் ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட உலோகத்துண்டு ஒன்று சிக்கியிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் மருத்துவர்கள் அதை வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து வெளியே எடுத்தனர். அதன் பிறகே குழந்தை இயல்பாக மூச்சு விடத் தொடங்கியது.
தற்போது தாய் மற்றும் சேயின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




0 Comments