Subscribe Us

header ads

சிரியா உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்த ரஷ்யா முயற்சி?: ஒபாமா கடும் கண்டனம்...



சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான சமாதான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் சிரியா அதிபருக்கு ஆதரவாக படைகளையும், ஆயுதங்களையும் அனுப்பிவரும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 500 குழந்தைகள் உள்பட 2.3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்காண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 493 குழந்தைகள், 7 ஆயிரத்து 371 பெண்கள் உள்பட பொதுமக்களில் 69 ஆயிரத்து 494 பேரும், அரசு ராணுவத்தை சேர்ந்த 49 ஆயிரத்து 106 வீரர்களும், அரசுக்கு ஆதரவான படையை சேர்ந்த 36 ஆயிரத்து 464 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபரின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து போர்க்கப்பல்களில் ஏராளமான ஆயுதங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இரட்டை கோபுரத்தின்மீது அல் கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய விமானத்தை மோதச் செய்து சுமார் 3 ஆயிரம் உயிர்களை குடித்த துயர சம்பவத்தின் பதிநான்காம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா கூறியதாவது:-

சிரியாவுக்கு போர் ஆலோசகர்களையும், ஆயுதங்களையும், வீரர்களையும் அனுப்பி வைத்திருக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையானது அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பாடுபட்டுவரும் உலக நாடுகளின் முயற்சிகளை சீர்குலைப்பதாக அமைந்துவிடும்.

இந்த நேரத்தில் அவர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே தோல்வியை சந்தித்துவரும் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை காப்பாற்றி விட முடியாது. ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்கா சந்தித்துவரும் அச்சுறுத்தல்களைவிட முஸ்லிம் மக்கள்தொகை அதிகமாக கொண்ட வடக்கு காக்காசஸ் பகுதியில் ரஷ்யா சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில், ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையானது சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது. எனினும், அரசியல்ரீதியான ஒரு தீர்வு காண்பதில் சற்றே பின்னடைவு ஏற்படக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments