புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பதவி பிரமாணங்கள் வழங்கப்பட்ட போதிலும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் பிற்போடப்பட்டன.
அதற்கமைய நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன் புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமானம் செய்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 பேர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.
இவ் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகளில் 27 ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கவுள்ளதுடன் ஏனையவைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்கவுள்ளன.
இதற்கிடையில் தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றில் அனுமதி கிடைக்கப்பட்ட போதிலும் கடந்த வெள்ளிக்கிழமை 42 பேருக்கு மாத்திரமே பதவி பிரமாணம் வழங்கப்பட்டது.
மங்கள சமரவீர வெளியுறவு அமைச்சராக இதற்கு முன்னரே பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அதற்கமைய ஏனைய 03 அமைச்சர் பதவிகளுக்கு நாளைய தினம் பதவி பிரமாணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் 2 அமைச்சர்கள் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் கிடைக்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய கட்சிக்கு அமைச்சர் பதவி ஒன்றும் கிடைக்கவுள்ளது.
0 Comments