இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க கூடாது. மஹிந்த ராஜபக் ஷ இந்த தேசத்தின் தந்தை இனவாதத்தின் தந்தையாக சம்பிக்க ரணவக்கவுள்ளார் என முஸ்லிம் வொய்ஸ் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீக் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனும் தொனிப்பொருளில் முஸ்லிம் வொய்ஸ் அமைப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பு பேர்ள் சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்று பிரதமரானால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும் என பிரசாரம் செய்யப்படுகிறது. இவ்வாறான பிரசாரங்கள் முஸ்லிம் தலைவர்கள் தங்களது சுய நலத்திற்காக மேற்கொள்ளப்படுவதாகும்.
கடந்த அரசாங்கத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பாக அளுத்கம கலவரத்தை சுட்டிக்காட்டியே பிரசாரம் செய்யப்படுகின்றது. அத்துடன் பொதுபலசேனாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மஹிந்த ராஜபக் ஷ எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.
கடந்த 30 வருடகால யுத்தத்தை ஒழித்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியவர் மஹிந்த ராஜபக் ஷ. அதனால் தற்காலத்தில் அவரை தேசத்தின் தந்தை என அழைக்கின்றனர். அதே போன்று சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையை இல்லாதொழித்து இனவாத கருத்துக்களை பரப்பி வரும் சம்பிக்க ரணவக்க இனவாதத்தின் தந்தையென தற்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களுக்கு எதிராக ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர்தான் சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த நல்லிணக்கத்தில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. 30 வருடங்களில் இந்த நாடு முஸ்லிம் நாடாகும் என்றும் முஸ்லிம்கள் 50 வீதத்திற்கு மேற்படும்போது அவர்களை கொலை செய்து விடுமாறும் அந்தப் புத்தகங்களில் எழுதியுள்ளார். இவ்வாறான நச்சுக்கருத்துக்களினால்தான் பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புக்கள் உருவாகின.
மேலும் மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அதை தடுத்தவர் சம்பிக்க ரணவக்க. அதேபோன்று அளுத்கம சம்பவத்தில் பொதுபலசேனாவின் செயற்பாட்டை சரிகண்டவரும் சம்பிக்கதான்.
இப்போது சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் சம்பிக்க போன்ற இனவாதிகள் பாராளுமன்றத்திற்கு போகக் கூடிய வழி அமைந்து விடும். எனவே முஸ்லிம்கள் எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ரொஷான் அஸீம் இங்கு கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் அஸீம் கூறுகையில்,
முஸ்லிம்களுக்கு இன்று உண்மையான, நம்பிக்கையான தலைவர்கள் தேவை. தற்போதைய முஸ்லிம் தலைவர்கள் இந்த சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்களது சுயநலனுக்காக முஸ்லிம் சமூகத்தை விற்பனை செய்கின்றனர்.
எமது சமூகத்தில் தொழில் இன்றி எத்தனை இளைஞர்கள் இருக்கின்றனர் என்பது இவர்களுக்கு தெரியாது. இதைப்பற்றி இவர்கள் சிந்திப்பது கூட இல்லை. இந்த தலைவர்கள் எமது சமூகத்தை விற்று அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக போராடுவோம்.
நூர் நிஸாம்
இங்கு கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் நூர் நிஸாம் கூறுகையில்,
கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை. பாராளுமன்றத்தில் சுமார் 18 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் தங்களது சுயநலத்திற்காகவும், தாம் சார்ந்த கட்சியை வளர்ப்பதற்காகவுமே செயற்பட்டு வந்ததை இவர்களது கடந்த கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
அத்துடன் திருகோணமலையில் பல வருடங்களாக மக்கள் போக்கு வரத்துக்கு பாலம் ஒன்று இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தபோது அங்கு பாலம் அமைப்பதற்கு ஐந்து முறை அடிக்கல் நாட்டியும் அது அமைக்கப்படவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ அந்த பாலத்தை கட்டி முடித்து மக்களின் கஷ்டத்தை போக்கினார். அத்துடன் யுத்தம் முடிந்ததன் பின்னர் வடகிழக்கு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் 159 பள்ளிவாசல்களில் அதான் ஒலிக்க கேட்கின்றது என்றார்.

0 Comments