அணுக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புக்களால் உலகம் அச்சமடைந்து, இனி அணு உலைகளே வேண்டாம் என மக்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர்.
இந்நேரத்தில் அதன் பாதிப்பிலிருந்து ஒரு ஊசியின்மூலம் காக்க முடியுமா? என்ற நோக்கில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தலைமையில் பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வந்தன. இதில், இந்த மிகப்பெரும் சவாலான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அவர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர்.
அணுக்கதிர்களால் உடலின் இரைப்பை பகுதிதான் முதல்கட்ட பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைத்தொடர்ந்து, உடலின் நீர் உறிஞ்சும் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதால் மின்பகுளிகளில் (எலக்ட்ரோலைட்) ஏற்றத்தாழ்வும், பாக்டீரியா தொற்றுக்களும், குடல் கசிவும், சீழ்பிடித்தல் போன்றவை தொடர்ச்சியாக ஏற்பட்டு உயிரிழப்புக்கே காரணமாக அமைகிறது.
கதிர் வீச்சு வயிற்றின் சிறிய குழாய் சுரப்பிகளில் முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மிகச் சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்பதால், இந்த பாதிப்பை தடுக்க கதிர்வீச்சுக்கு ஆளான மனிதருக்கு முதல் 24 மணி நேரத்துக்குள் புரதக்கூறு மருந்தான TP508-ஐக் கொடுக்கப்பட வேண்டும். இது தசைகள், எலும்பு மற்றும் தோல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். இது கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்து செல்கள் அழிவதைத் தடுக்கும்.
இந்நிலையில் TP508 மருந்தை அணுக் கதிர்களால் பாதிக்கப்பட்ட எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின்னர் செலுத்தி சோதனை செய்ததில் இம்மருந்து அந்த பாதிப்பிலிருந்து காப்பதாக ஊர்ஜிதமாகியுள்ளது.
ஏற்கனவே இம்மருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் புண்கள் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மணிக்கட்டு முறிவுகளை சரிபடுத்துவதற்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments