உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் பதினோராவது இடத்தைப் பிடித்த பி.எம்.டபிள்யு-வின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் தனது 89-ஆவது வயதில் காலமானார். இவர் பி.எம்.டபிள்யு நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்கு வகித்தார் என்று கருதப்படுகின்றது. இவர் ஜெர்மனியின் பேட் ஹோம்பர்க் நகரில் காலமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1926-ஆம் ஆண்டு பிறந்த ஜோஹேனா புருன், 1950-களில் தொழிலதிபர் ஹெர்பர்ட் குவந்த்-இன் காரியதரிசியாக முதலில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், ஹெர்பர்ட்டின் தனிப்பட்ட உதவியாளரானார். ஜோஹேனா 1960-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஹெர்பர்ட் குவந்த்தையே மணமுடித்தார். 1982-ஆம் ஆண்டு கணவர் இறந்த பின்னர், பி.எம்.டபிள்யு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஹேனா அந்நிறுவனத்தின் 16.7 சதவிகித பங்கின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பிள்ளைகள் ஸ்டீஃபன் மற்றும் சுசேன் க்லேட்டன் ஆகியோரும் அந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாகவும், நிறுவனத்தின் கண்காணிப்பு குழுவிலும் உள்ளனர். ஜோஹேனா ஜெர்மனியின் தொண்டு நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் வரை ஜோஹேனா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 4370 கோடி டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


0 Comments