உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவதை இலக்காகக் கொண்ட, முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் இம்பல்ஸ் 2 விமானம்’, தனது முதல் உலகச் சுற்றுப் பயணத்தை அபுதாபியில் கடந்த மார்ச் 9-ம் தேதி தொடங்கியது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள இந்த விமானத்தை, வர்த்தகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் முயற்சியாகவே இந்த உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து இந்தியா உட்பட பல நாடுகள் வழியாகப் பறந்த சோலார் இம்பல்ஸ் விமானம் ஜப்பானில் இருந்து, ஐந்து இரவு ஐந்து பகல் இடைவிடாது பயணித்து 7,200 கிமீ தூரத்தை வெற்றிகரமாகக் கடந்து, கடந்த ஜூலை 4-ம் தேதி ஹவாய் தீவைச் சென்றடைந்தது. எரிபொருள் நிரப்பாமல் தனிநபர் விமானம் ஒன்று சுமார் 118 மணிநேரத்தில்(117 மணி நேரம் 52 நிமிடம்) இவ்வளவு தூரத்தைக் கடப்பது இதுவே முதல் முறை.
ஆனால் இந்தச் சாதனையை புரிந்த சோலார் இம்பல்ஸ் விமானம், அதன் சூரிய ஒளியை மின்சக்தியாக சேமித்து வைக்கும் 4 பேட்டரிகளில் ஏற்பட்ட பிரச்சனையால், துரதிர்ஷ்டவசமாக அடுத்த 9 மாதங்கள் ஹவாய் தீவில் தங்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், சோலார் இம்பல்ஸ் 2 விமானம் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இன்னும் 20 மில்லியன் யூரோ (சுமார் 140 கோடி ரூபாய்) தேவைப்படுவதாக அவ்விமானக்குழு தெரிவித்துள்ளது. இதனால், விமானத்தின் வடிவமைப்பாளர்களும் முதலீட்டாளர்களுமான பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் இருவரும் நிதி திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.



0 Comments