கம்யூனிச ஆட்சியின் கீழ் இயங்கும் சீனாவில், கடுமையான குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஜோடி ஒரே குழந்தைதான் பெற வேண்டும் என்பது அதில் முக்கியமான ஒன்று.
அதேபோல், சீனாவின் ஹேனான் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் வேலைக்கு சேரும் இளம்பெண்களுக்கு நிறைய கட்டளை விதித்திருக்கிறது. அதன்படி, கர்ப்பம் தரிக்கும் எண்ணம் உள்ளவர், குழந்தை பெறுவதற்கான கால அளவை தெரிவித்து முன்அனுமதி பெற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு நிறுவனம் விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர், நிறுவனம் கொடுக்கும் கால அவகாசத்துக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பது சாத்தியமில்லை என கருத்து தெரிவித்திருக்கிறார்.
அந்நிறுவனத்தில் ஒரு வருடத்துக்கு மேல் வேலை செய்யும் பணியாளர்களில் திருமணம் ஆனவர்கள் மட்டும் குறிப்பிட்ட அவகாசத்தில் கர்ப்பம் தரிக்க அனுமதிக்கபடுவார்கள் எனவும், பிறப்பு திட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வேலையை கெடுத்துக்கொண்டு, பிறப்பு திட்டத்தை கைவிட்டு கர்ப்பம் தரிப்பவர்களுக்கு 1,000 யூவான் அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், அவர்கள் சம்பள போனஸ் மற்றும் உயர் பதவி அல்லது பரிசுகளையும் இழக்க நேரிடும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.
வேலை செய்பவர்களை மனிதர்களாக பாராமல், அவர்களை வெறும் உற்பத்தியை பெருக்கும் கருவியாக கருதுவதாக அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்தன. இதுபற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளிக்கும்போது, இது வெறும் வரைவு எனவும், வேலை செய்பவர்களின் கருத்துக்காகவே அனுப்பப்பட்டது என பல்டியடித்தார்.


0 Comments