கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நாளை 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் அவரை, குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு பிரதான
நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் முன்னிலையில் சற்று முன்னர்
ஆஜர்படுத்தப்பட்டபோதே பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இவர் இன்று காலை பொலிஸ் நிதி மோசடி பிரிவில், சதொச நிறுவனத்தில்
இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
பணம் கொடுக்காமல் லங்கா சதொசவில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான
பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்ற
விசாரணை பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச சொத்துக்கள் பயன்பாட்டில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவர் கைது
செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளுக்காக
வாக்குமூலம் வழங்க முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்
பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


0 Comments