கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பிரல்யமடைந்த விடயம் தான் மியன்மார் சம்பவங்கள். மியன்மாரிய கலவரங்களுக்கெதிராக பலரும் பல விதத்தில் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பது வரவேற்கத்தக்கதே. எனினும்.
இதற்கும் வரம்புகள் இருப்பதை எம்மில் சிலர் மறந்துவிட்டார்கள். தாம் எதிர்ப்புத்தெரிவிப்பதாக கருதிக்கொண்டு சில நோயடைந்த பிக்குகளினதும், பர்மீய முகவாக்கு கொண்ட ஒருசிலரது புகைப்படங்களை பெரும்பான்மையினத்தவர்களும் உறுப்புரிமைப்பெற்ற ஒரு சில முகநூல் பக்கங்களில் அல்லாஹ்வின் சாபம் இறங்கியதாக பதிவேற்றிக்கொண்டு எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு வருகின்றனர்.
அந்த போட்டோக்களில் இருப்பவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்டதற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் இவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் இறங்கியதாக கூறுவது எந்த இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை? அவர்களுக்கெதிராக சாபமிட்டு துஆ செய்யும்படி காட்டித்ததந்த தலைவர் யார்??
நிச்சயமாக அது ரஸுலுல்லாஹ்வோ, கலீபாக்களோ காட்டித்தந்த வழிமுறையாக இருக்க முடியாது. அவர்களுக்கு இதை எடுத்துக்கூறினாலும், தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கின்றனர்.
மியன்மாரில் நடக்கின்ற அட்டூழியங்களை யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாது என்பது உண்மை தான். ஆனால், அதனை அணுகுவதற்கு ஒரு முறையுண்டு. வெறுமனே, தங்களுக்கு வருகின்ற ஆக்ரோஷத்தை பேஸ்புக்கில் அசிங்கமான முறையில் கொட்டித்தீர்ப்பதால் ஒன்றும் சாதிக்க முடியாது.
இவர்களின் அறிவு மட்டத்தை நோக்கும் போது இன்னும் கவலையாக இருக்கின்றது. எந்தளவுக்கென்றால், முஸ்லிம்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சிங்கள நண்பர்களையும் வம்புக்கிழுக்கின்றனர். இவர்கள் முகநூலில் பதிவிடும் போது சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும்
1. ரசூலுல்லாஹ்வின் வாழ்க்கையில் எத்தனையோ கொடூரங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு போதும் அவர்களுக்கெதிராக சாபமிட்டு துஆ செய்தில்லை. அவர்கள் எங்களுக்கு அப்படியான வழிமுறையினை காட்டித்தரவுமில்லை. உதாரணத்துக்கு ரசூலுல்லாஹ்வின் தாயிப் விஜயத்தை குறிப்பிடலாம்.
2. பகிரப்படும் புகைப்படங்களின் உறுதித்தன்மை: அல்லாஹ்வின் சாபம் இறங்கியதாக பகிரப்படும் புகைப்படங்களில் உள்ளவர்கள் கலவரங்களில் ஈடுப்பட்டதற்க்கு எந்த வித ஆதாரமும் இல்லை. அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது நீண்ட காலமாக அவர்களுக்கு இருக்கின்ற நோயையே காட்டுகிறது. ஆகவே, இந்த பகிர்வுகளை பார்க்கும் போது நாம் அடுத்தவர்களின் நோயில் இன்பம் காண்பதையே குறிக்கின்றது.
3. நாம் முகநூலில் எமது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் பெரிதாக ஒன்றையும் சாதித்து விட முடியாது. முக நூலில் பதிவிடும் போது தமது கருத்து அனைவரையும் கவர்ந்தெடுக்கும்படி இருத்தல் அவசியம். அதன் மூலம், ஏனையவர்களும் உண்மையை புரிந்து கொள்வதற்க்கு வாய்ப்பாக அமையும். இன்றேல், இது போன்ற பதிவுகளின் மூலம், முஸ்லிம்களின் மீதுள்ள வெறுப்பு இன்னும் அதிகமாவது மட்டுமில்லாமல் வீணான வன்முறைகளுக்கு காரணமாகவும் அமையும்.
4. முகநூலில் கொட்டித்தீர்ப்பது மட்டும் இஸ்லாத்தின் கடமையல்ல. நாம் நம்மை மறுமைக்கு தயார்ப்படுத்திக்கொள்வதோடு அடுத்தவர்களையும் சரியான வழியில் அழைத்து செல்ல வேண்டும். முகநூலில் கொட்டித்தீர்ப்பதவர்களின் profileகளை பார்த்தால், அவர்கள் எங்கோ வீணான ஒரு விபச்சார நடிகனை அல்லது நடிகையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள். ரசூளுல்லாஹ்வை பின்பற்றாத இவர்கள் ரசூலுல்லாஹ் தடுத்ததை பின்பற்றும் போது இஸ்லாத்தின் காவலாளிகளாக மாறமுடியுமா??? அல்லது எங்கோ ஒரு கொடூரம் நடக்கும் போது மட்டும் வாய் பிளப்பதன் மூலம் இஸ்லாத்தை பாதுகாத்த நன்மை கிடைக்குமோ???
Rohingyaவுக்காக அதிகம் அதிகம் பிரார்த்திப்போம். அதன் மூல சூத்திரதாரிகளுக்கு ஹிதாயத் கிடைக்க பிரார்த்திப்போம். முடிந்தளவு உடலையும், பொருளையும் தியாகம் செய்து அவர்க்களுக்கு உதவி செய்வோம்.
ஒரு தினத்தை இவர்களுக்காக ஒதுக்கி அனைவரும் நோன்பு பிடித்து துஆ செய்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.


0 Comments